search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை மாவட்டத்தில் 11-வது நாளாக மழை: குளம்போல் மாறிய சம்பா பயிர் வயல்கள்
    X

    நாகை மாவட்டத்தில் 11-வது நாளாக மழை: குளம்போல் மாறிய சம்பா பயிர் வயல்கள்

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையிலும் தொடர்ந்து 11 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
    சீர்காழி:

    தமிழகத்தில் கடந்த 27-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைதொடர்ந்து வங்க கடலில் வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலோர மாவட் டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையிலும் தொடர்ந்து 11 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று காலை தூறல் மழை பெய்தது. இரவும் மழை தொடர்ந்து தூறிக்கொண்டே இருந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன. கும்பகோணம் பகுதியில் மட்டும் சுமார் 2000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதமாகி உள்ளன.

    திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.

    குறிப்பாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் மழை விடாமல் மழை பெய்கிறது. இதனால் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகிறார்கள். சம்பா பயிர்கள் ஒரு அடிக்கும் மேலான தண்ணீரில் மூழ்கியப்படி இருப்பதால் வயல்கள் அனைத்தும் குளம்போல காட்சியளிக்கிறது.

    டெல்டா மாவட்டங்களில் நாகை மாவட்டத்தில் தான் மிக அதிகளவு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 30-ந் தேதி முதல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    நாகை, சீர்காழி, மயிலாடுதுறை, கொள்ளிடம், வேதாரண்யம், தலை ஞாயிறு ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. தலைஞாயிறு பகுதியில் நேற்று அதிகபட்சமாக 8.4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    சீர்காழி பகுதியில் கனமழை விடாமல் பெய்து வருவதால் ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்களில் புகுந்தன.

    சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள திருநகரி, கோவிலான் பகுதிகளில் வாய்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக விளக்குமுக தெரு, வள்ளுவர் தொரு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மற்றும் விவசாய நிலங்களில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதேபோல் எடக்குடி வடபாதி பகுதியில் சாந்தபுத்தூர், கீழவெளி, கரைமேடு, அட்டக்குளம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    வேதாரண்யத்தில் நேற்று மழை விட்டு விட்டு பெய்தது.

    வேதாரண்யம், கோடியக்கரை , தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து கட்டியது. இதனால் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ளம் புகுந்தது. மழை தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.இன்று காலையிலும் வேதாரண்யம் பகுதியில் மழை தூறிக்கொண்டே இருந்தது.

    மேலும் கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் இன்று 8-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    தொடர்ந்து 11-வது நாளாக டெல்டாவை மிரட்டி வரும் மழையால் விவசாயிகள் சோகத்தின் விளம்பில் இருந்து வருகின்றனர்.
    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருத்துறைப்பூண்டி - 84.2
    தலைஞாயிறு - 75.2
    நாகை - 69.9
    திருப்பூண்டி - 68.4
    வேதாரண்யம் - 51.4
    திருவாரூர் - 49.2
    முல்லையாறு - 31.2
    நெய்வாசல் - 30.8
    மன்னார்குடி - 23.4
    குடவாசல் - 20.2
    நன்னிலம் - 18.2
    கோறையாறு - 15.2
    பேராவூரணி - 12.8
    வலங்கைமான் - 12.2
    ஒரத்தநாடு - 8.3
    வெட்டிக்காடு - 7.6
    மஞ்சலாறு - 6.2
    சீர்காழி - 3.4
    கல்லணை - 1.4
    அணைக்கரை - 1.2
    பூதலூர் - 0.4

    Next Story
    ×