search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்று காதலியை கொன்று புதைத்த காதலன்
    X

    கோவையில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்று காதலியை கொன்று புதைத்த காதலன்

    கோவையில் காதலியை சுற்றுலாவுக்கு அழைத்து சென்று கொன்று புதைத்த காதலன் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை வேலாண்டி பாளையம் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் ஐதர். இவரது மகள் ருஷ்வானா (21). பட்டதாரி. வீட்டில் இருந்து வந்த ருஷ்வானா கடந்த 16-ந் தேதி திடீரென மாயமானார்.

    இதையடுத்து பெற்றோர் அக்கம், பக்கத்தினர் மற்றும் தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து கடந்த 19-ந் தேதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் ருஷ்வானாவின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் யார்-யாரிடம் அதிக நேரம் பேசினார். கடைசியாக யாரிடம் பேசினார் என்று கண்காணித்தனர்.

    அப்போது அவர் மாயமான அன்று கோவை சரவணம்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்த் (26) என்பவருடன் பேசியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பிரசாந்த்தை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பின்னர் போலீசார் அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்திய போது அவர் ருஷ்வானாவை கொலை செய்து உடலை புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

    அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுப்பற்றிய விபரம் வருமாறு-

    ருஷ்வானாவும், சாப்ட் வேர் என்ஜினீயர் பிரசாந்தும் காதலித்து வந்தனர். அதன்படி கடந்த 16-ந் தேதி 2 பேரும் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பழப்பண்ணைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரசாந்த், ருஷ்வானாவை தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து விட்டார். பின்னர் பிரசாந்த் உடலை அங்கேயே விட்டு விட்டால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து, இறந்த ருஷ்வானாவின் தலையில் கல்லை எடுத்து போட்டு இருக்கிறார். பின்னர் அங்கேயே குழி தோண்டி ருஷ்வானாவின் உடலை புதைத்து விட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் வந்து இருக்கிறார்.

    இதையடுத்து போலீசார் பிரசாந்த்தை அழைத்துக் கொண்டு இன்று மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பழப்பண்ணைக்கு அழைத்து சென்றனர். அங்கு ருஷ்வானாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டு 8 நாட்கள் ஆனதால் அவரது உடல் அழுது கிடந்தது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து பிரசாந்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×