search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை
    X

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை

    பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளதால் உறுதியாக எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் அருகே நகர அ.தி.மு.க. சார்பில் 46-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.

    விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவச வே‌ஷ்டி, சேலைகளை வழங்கி பேசியதாவது:-

    நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பல கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு காணமால் போய் விட்டது. ஆனால் அ.தி.மு.க. என்றைக்கும் நிலைத்து இருக்கும். கடந்த 2011 தேர்தலில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் ஜெயலலிதா நிறைவேற்றி காட்டினார். மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற தாரகமந்திரத்தினை கொண்டு 2016-ம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, அ.தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர வைத்தவர் ஜெயலலிதா.

    அவர், நான் இல்லாவிட்டாலும் இந்த கட்சி 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று சட்டசபையில் தெரிவித்தார். இன்று அவர் மறைந்தாலும், அவரது வழியில் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.விற்கு சோதனை வருவது வழக்கம் அதை போன்று தான் தற்போது சோதனை வந்தது. ஆனால் அதில் இருந்து மீண்டு விட்டோம்

    முதல்வர், துணை முதல்வர் இணைந்து தேர்தல் ஆணையத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். வருகிற 23-ந்தேதி எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். எங்கள் சின்னம் முடக்கப்பட்டு மீட்ட வரலாறும் உண்டு. அதே வரலாறு தான் தற்போது திரும்புகிறது. பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளதால் உறுதியாக எங்களுக்கு சின்னம் கிடைக்கும். மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெறுவோம்.

    கட்சியின் 50-வது ஆண்டு பொன்விழா வரும் போதும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும். அடுத்த மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க இருக்கிறார். குறிப்பாக தூத்துக்குடி 4-வது குடிநீர் திட்டம் மற்றும் கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×