search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி: மதுபழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி
    X

    திருச்சி: மதுபழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி

    திருச்சியில் மதுபழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த மனைவி அளித்த வைத்தியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
    திருச்சி:

    தமிழகத்தில் மது குடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. பாமரன் முதல் படித்தவர்கள் என மது பழக்கத்திற்கு பலர் அடிமையாகி உள்ளனர். குடித்து விட்டு பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் குடிமகன்களின் சேட்டை வீட்டிற்கு வந்ததும் உச்சத்தை அடைந்து விடுகிறது.

    இதனால் வீடே கதி என்று கிடக்கும் மனைவிமார்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளை கூட மது அருந்தி விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் பஞ்சாயத்து செய்வது தான் குடிமகன்களின் வாடிக்கையான ஒன்று. இதனால் மனம் விட்டு கணவனிடம் பேசவேண்டும் என்று காத்திருக்கும் மனைவிமார்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் என ஊர்பிரச்சனை கூட வீட்டில் வெடித்து விவாகரத்து வரை சென்று விடுகிறது.

    பொறுமையின் மறு உருவமான பெண்கள் பலர் இந்த குடிமகன்களிடம் அடங்கியே தங்கள் காலத்தை கடந்து சென்று விடுகின்றனர். இன்னும் சிலர் சிறிது காலம் பிரிந்து தனிமையில் வாழ்வதும், சிலர் நிரந்தரமாக சட்ட உதவியுடன் விவாகரத்து பெறுவதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    இந்தநிலையில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை திருத்துவதற்காக குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் தங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    திருச்சி புத்தூர் ஆட்டு மந்தை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

    இவருக்கு நதியா (31) என்ற மனைவியும், சந்தியா (12), பிருந்தா (10) என்ற பள்ளியில் பயிலும் 2 மகள்களும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான குமார் தினமும் வேலை முடிந்ததும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.

    இதனால் இவரது மனைவி குடும்ப சூழ்நிலை மற்றும் தமது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அடிக்கடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனாலும் குமார் மனைவின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.

    அது மட்டுமல்லாமல் போதையில் வரும் குமார் மனைவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு நதியாவை அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த நதியா கணவனை திருத்த வேண்டும் அல்லது தனியாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தார்.

    குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்றதும், வீட்டிலிருந்து குழந்தைகள் சந்தியா, பிருந்தா ஆகியோருடன் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி நதியா வீட்டை விட்டு வெளியேறினார். அன்று மாலை குமார் வந்து பார்த்த போது மனைவி குழந்தைகளை காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்தார்.

    உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் விசாரித்து வந்துள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால் உறையூர் போலீசில் புகார் செய்தார். கடந்த 3 மாதமாக நதியா மற்றும் மகள்கள் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அழுது புலம்பினார். அவர்கள் எங்கும் சென்று தலைமறைவாகி விட்டார்களா? அல்லது வாழ்வில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது தெரியாமல் தவித்தார்.

    இந்நிலையில் நேற்று நதியா கரூரில் உள்ள அவரது தாய் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று நதியாவிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர், தனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை அடித்து உதைத்ததாகவும், இதனால் வெறுப்படைந்த நான் அவரை திருத்த வேண்டும் என்பதற்காக கரூரில் உள்ள தனது தாய் வீட்டில் தனது 2 மகள்களுடன் தஞ்சம் அடைந்ததாக தெரிவித்தார்.

    தனது இருப்பிடம் குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இப்போது தனது கணவர் குமார் குடிப்பழக்கத்தை நிறுத்தி தன்னுடன் வாழ்வதாக கூறியுள்ளார். இதனால் நான் மற்றும் எனது குழந்தைகளுடன் அவருடன் வாழ வருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து தீபாவளியை திருச்சியில் குடும்பத்துடன் கொண்டாட குமார் தயாராகி விட்டார்.
    Next Story
    ×