search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போளூர் பள்ளியில் மாணவிகள் முன்பு ஆசிரியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்
    X

    போளூர் பள்ளியில் மாணவிகள் முன்பு ஆசிரியரை அரிவாளால் வெட்டிய வாலிபர்

    போளூர் பள்ளியில் இன்று காலை மாணவிகள் முன்பு ஆசிரியரை அரிவாளால் வெட்டிய வாலிபர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    போளூர் அருகே பாலகிருஷ்ணன் கண்ணையன் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 39). மாற்றுத்திறனாளியான இவர், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலை கார்த்திகேயன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பள்ளியில், பெற்றோர்- ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. இதில் ஆசிரியர் கார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.

    அப்போது, ஆசிரியர் கார்த்திகேயனை, கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர் திடீரென்று மறைத்து எடுத்து வந்த அரிவாளுடன் பாய்ந்து வெட்டினார். அந்த வாலிபரிடம் இருந்து தப்பிக்க ஆசிரியர் ஓட்டம் பிடித்தார்.

    பள்ளி வளாகத்தில் மாணவிகள் கண் முன்பு ஆசிரியரை, அந்த வாலிபர் சரமாரியாக வெட்டினார். கழுத்தில் பலத்த வெட்டு விழுந்ததில் ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    இதையடுத்து, ரத்தக்கறை படிந்த அரிவாளை சுழற்றிக் கொண்டே அந்த வாலிபர் பள்ளியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஆசிரியர் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அரிவாளுடன் தப்பிய வாலிபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×