search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவரின் குடி பழக்கத்தால் மகளை கொலை செய்து தற்கொலை செய்த இளம்பெண்
    X

    கணவரின் குடி பழக்கத்தால் மகளை கொலை செய்து தற்கொலை செய்த இளம்பெண்

    கணவரின் குடி பழக்கத்தால் 4 வயது மகளை கொலை செய்து இளம்பெண் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பழனி:

    பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகை ஜோதி (வயது25). இவருக்கும் கோவையை சேர்ந்த சசி (28) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சசி கோவையில் தனியார் பஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுபிக்ஷா (3½) என்ற மகள் இருந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கார்த்திகை ஜோதி மகளுடன் பழனியில் தனது பாட்டி சின்னாள் (60). வீட்டில் வசித்து வந்தார். நேற்று சின்னாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டிற்குள் கார்த்திகை ஜோதியும், அவரது மகளும் இறந்து கிடந்தனர்.

    இது குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், பிளஸ்-2 வரை படித்துள்ள கார்த்திகைஜோதி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சசியை காதலித்து ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஒருவருடம் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

    சசிக்கு குடிபழக்கம் மற்றும் வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததால் கார்த்திகைஜோதி அவரை விட்டு பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். அதன்பிறகு சசி பலமுறை அழைத்தும் அவர் செல்லவில்லை. உன்னிடம் உள்ள தவறான பழக்கங்கள் அனைத்தையும் விட்டால்தான் சேர்ந்து வாழ்வேன் என உறுதியாக கூறி உள்ளார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சசி மீண்டும் தனது மனைவியிடம் வந்து தான் திருந்தி விட்டதாகவும் இனிமேல் 2 பேரும் சேர்ந்து வாழலாம் என கூறி உள்ளார். அதன்பிறகு சில நாட்கள் மனைவியுடன் தங்கி இருந்தர். அப்போது சசியின் பழக்கங்கள் மாறவில்லை என கார்த்திகை ஜோதிக்கு தெரிய வந்தது. இதனால் அவரை சத்தம்போட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

    அதன்பிறகு உடுமலை பேட்டையில் உள்ள தனது உறவினர், தனது கணவர் மற்றும் தனது மாமாவிற்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் என் வாழ்க்கையில் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. என் கணவர் திருந்தி விடுவார் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து விட்டேன். இதனால் நான் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளேன். எனது மகளை யாரிடமும் விட்டு செல்ல எனக்கு மனமில்லை. எனவே அவளையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் என எழுதி இருந்தார். அந்த முடிவின்படியே மகளை சேலையால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு பின்னர் அதே சேலையில் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
    Next Story
    ×