search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை
    X

    இரட்டை குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை

    சூலூரில் இட்லியில் விஷம் கலந்து கொடுத்து இரட்டை குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.

    இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

    கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த 17-ந்தேதி மாமியார் வீட்டுக்கு சென்ற வீரபத்திரன் மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். அவர் மறுக்கவே குழந்தைகள் இருவரையும் தன்னுடன் அழைத்து வந்து விட்டார்.

    இதுகுறித்துபாண்டியராணி நேற்று சூலூர் போலீசில் புகார் கூறினார். பின்னர் அவர் உறவினர்களுடன் கணவர் வீட்டுக்கு சென்றார். அங்கு வீரபத்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார். குழந்தைகள் இருவரும் கட்டிலில் பிணமாக கிடந்தனர். குழந்தைகளின் உடல் அருகே இட்லி, ரொட்டித்துண்டுகள் கிடந்தன.

    மனைவி பாண்டியராணியுடன் வீரபத்திரன்.

    குழந்தைகளுக்கு இட்லியில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு, வீரபத்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கணவர், குழந்தைகளின் உடல்களை பார்த்து பாண்டியராணி கதறி அழுதார்.

    சம்பவஇடத்துக்கு சூலூர் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். வீரபத்திரன் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பாண்டியராணி ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துள்ளார்.

    வீரபத்திரன் குழந்தைகளை தன்னுடன் அழைத்து வந்த போது குழந்தைகள் அணிந்திருந்த தங்கதாயத்து, வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவற்றை செம்பட்டியில் உள்ள ஒருவரிடம் கொடுத்து தனது மாமியாரிடம் ஒப்படைக்குமாறு கூறி விட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    குழந்தைகளை அழைத்து வந்து விட்டால் மனைவி எப்படியும் தன்னுடன் வந்து விடுவார் என வீரபத்திரன் கருதினார். ஆனால் மனைவி வராததால் வீரபத்திரனுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளை பராமரிக்க முடியாமலும் அவர் திணறினார். இதனால் மனமுடைந்து அவர் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    3 பேரின் உடல்களும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    கடந்த வாரம் பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குழி பகுதியில் கணவர் தனிக்குடித்தனம் நடத்த வராததால் இரட்டை ஆண் குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

    அதேபோல நடந்துள்ள இச்சம்பவம் காடம்பாடி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×