search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் படகுடன் சிறைப்பிடிப்பு
    X

    புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் படகுடன் சிறைப்பிடிப்பு

    புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையால் இன்று சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஏராளமானோர் 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று காலை நெடுந்தீவு அருகே 8 பேர் 2 விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், நெடுந்தீவு கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி 8 பேரையும் 2 விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை.

    இந்நிலையில் 8 பேர் இலங்கைகடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை  மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறி வந்த நிலையில், இன்று 8 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×