search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துவரிமான் அருகே பாபநாசம் பட பாணியில் மாமியாரை கொன்ற மருமகன்
    X

    துவரிமான் அருகே பாபநாசம் பட பாணியில் மாமியாரை கொன்ற மருமகன்

    சொத்துக்காக மாமியாரை பாபநாசம் பட பாணியில் கொலை செய்து புதைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    சென்னையைச் சேர்ந்தவர் ஜோதி (வயது 52). இவர் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்தார்.

    கணவர் இறந்த பின்னர் மற்றொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்திருந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோதியை, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஜோதியின் மருமகன் செல்வின் சொத்து தொடர்பாக தகராறு செய்துள்ளார்.

    இந்த தகராறின்போது ஜோதியை நெஞ்சில் பலமாக குத்தியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் செல்வின் நண்பர்கள் அழகரடி அருண், பொன்மேனி முகமது ஷெரீப் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    தாக்குதலில் இறந்த மாமியார் ஜோதியை மருமகன் செல்வின் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மதுரை துவரிமான் அருகே புல்லூத்து பாய்ஸ் டவுன் வளாகத்தில் உள்ள தோட்டத்திற்கு கொண்டு சென்று புதைத்துள்ளனர்.

    அம்மாவை அழைத்துச் சென்ற செல்வினிடம், ஜோதியின் மகன் ஹரிஷ் தொடர்பு கொண்டு குறித்து கேட்டபோது, ஜோதியை கொலை செய்துவிட்டதாக செல்வின் கூறினார்.

    இதுகுறித்து மதுரை கரிமேடு போலீஸ் நிலையத்தில் ஹரிஷ் புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் கரிமேடு போலீசார் மேற்கொண்ட அதிரடி விசாரணையில் செல்வின் மற்றும் அவரது நண்பர்கள் நடந்த சம்பவத்தை ஒத்துக் கொண்டனர்.

    கொலை செய்து ஜோதியை புதைத்த தகவலை சொல்லாமல் பல்வேறு இடங்களுக்கு போலீசாரை இழுத்தடித்தனர்.

    இந்த நிலையில் ஜோதியின் உடலை புல்லூத்தில் புதைத்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். அதனடிப்படையில் இன்று ஆர்.டி.ஓ. முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் புல்லூத்து பாய்ஸ் டவுன் நாகமலை அடிவாரத்தில் இடம் கண்டறியப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டது.

    மாமியார் ஜோதி புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தைத்தான் செல்வின், காளான் பண்ணைக்காக 3 வருடக் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், தற்போது காளான் பண்ணையை வேறு ஒருவருக்கு மாற்றிவிட்டு, தோட்டத்தையும், அருகிலுள்ள வீட்டையும் பயன் படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சொத்துக்காக மாமியார் ஜோதியை ‘பாபநாசம்’ பட பாணியில் கொலை செய்து புதைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×