search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட அவினாஸ் பூசன்
    X
    கொலையுண்ட அவினாஸ் பூசன்

    ரூ.50 லட்சம் கேட்டு மெட்ரோ ரெயில் அதிகாரி மகன் கடத்தி கொலை

    திருவொற்றியூரில் ரூ.50 லட்சம் கேட்டு மெட்ரோ ரெயில் அதிகாரி மகன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிணை நடத்தி வருகின்றனர்
    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் 8-வது தெருவில் வகித்து வருபவர் அஜெய்குமார்.

    திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் பணியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அவினாஸ் பூசன் (வயது28). ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

    கடந்த 7-ந்தேதி அவினாஸ் பூசன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவிலலை. 3 நாட்களாகியும் வீடு திரும்பாததால் கடந்த 10-ந்தேதி அஜெய்குமார் தனது மகனை காணவில்லை என்று சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜெய்குமாரின் செல்போனுக்கு அவினாஸ் பூசன் செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், “உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். அவனை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும்” என்று கேட்டு மிரட்டினார். இதுபற்றி அஜெய்குமார் போலீசில் தெரிவித்தார்.

    மாதவரம் போலீஸ் துணை கமி‌ஷனர் கலைச்செல்வம், எண்ணூர் போலீஸ் உதவி கமி‌ஷனர் தினகரன், சாத்தாங்காடு இன்ஸ்பெக்டர் கெங்கேஸ்வரன் மற்றும் போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே 1 கிலோ மீட்டர் தொலைவில் சடையங்குப்பம் பகுதியில் இருந்து மர்ம நபர்கள் பேசியது தெரிய வந்தது.

    கொலையாளிகள் வெங்கடேசன், ரமேஷ்.

    இதையடுத்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அவினாஸ் பூசனின் நெருங்கிய நண்பர் வெங்கடேசன். இருவரும் 8-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். வெங்கடேசன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர். தற்போது ஜாமீனில் வெளியே வந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்.

    வெங்கடேசனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அவினாஸ் பூசனை கடத்தி கொலை செய்து புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவலை கூறினார்.

    இதையடுத்து அவரையும், கொலைக்கு உடந்தையாக இருந்த பீகாரை சேர்ந்த ரமேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    வெங்கடேசன் போலீசாரிடம் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நானும், அவினாஸ் பூசனும் நண்பர்கள். நாங்களும், ரமேஷ் உள்பட நண்பர்கள் சிலரும் கடந்த 7-ந்தேதி சடையங்குப்பம் இரும்பு பாலம் அருகே புதர் பகுதியில் அமர்ந்து மது குடித்தோம். அவினாஸ் பூசனின் தந்தை மெட்ரோ ரெயில் அதிகாரியாக வேலை பார்ப்பதால் பணம் நிறைய இருக்கும், தந்தையை மிரட்டி பணம் வாங்கினால் ஜாலியாக செலவு செய்யலாம் என்று அவரிடம் கூறினோம். அதற்கு அவினாஸ் பூசன் மறுத்தார். தனது தந்தை ரூ. 25 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்குவதாக கூறி பணம் கேட்டு மிரட்ட முடியாது என்றார்.

    இதனால் அவருக்கும் நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், ரமேஷ் இருவரும் அவினாஸ் பூசனை கடத்தி சென்று இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அங்குள்ள ஒரு புதரில் பள்ளம் தோண்டி பிணத்தை புதைத்தனர்.

    அதன் பிறகு வெங்கடேசன், அவினாஸ் பூசன் செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து தனது செல்போனில் போட்டு அவரது தந்தைக்கு போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினார்.

    மகனின் செல்போன் நம்பரில் இருந்து போன் வந்ததால் அவினாஸ் பூசன் உயிரோடு இருப்பதாக நினைத்த அஜெய்குமார் கடத்தல் கும்பலிடம் தான் ரூ.25 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்குவதாகவும், தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். கடத்தல் கும்பல் விடாப்பிடியாக பணம் கேட்டதால் போலீஸ் உதவியை நாடினார்.

    பணம் கிடைத்தால் அதை பெற்றுக் கொண்டு செல்போனை கொடுத்து விட்டு தப்பிச் செல்லவும் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டிருந்தனர்.

    மேற்கண்ட தகவல்கள் வாக்குமூலத்தில் தெரிய வந்தது.

    அவினாஸ் பூசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்டினர். அவரது உடல் இன்று மாலை அம்பத்தூர் ஆர்.டி.ஓ. அரவிந்தன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படுகிறது.
    Next Story
    ×