search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெருவில் கிடந்த பிறந்து சில நிமிடமே ஆன ஆண் குழந்தை
    X
    தெருவில் கிடந்த பிறந்து சில நிமிடமே ஆன ஆண் குழந்தை

    பெற்ற குழந்தையை தெருவில் போட்டுச்சென்ற இளம்பெண்

    கவுந்தப்பாடி அருகே அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழந்தை பெற்று அங்கேயே இளம்பெண் போட்டுவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஊர் சலங்கப்பாளையம் இங்குள்ள பட்டத்தரசியம்மன் கோவில் பக்கத்தில் விநாயகர் கோவில் வீதி உள்ளது.

    இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தெருவில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறதே.. என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் வீடுகளின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது தெருவில் அவர்கள் கண்ட காட்சி நெஞ்சை பதற வைத்தது.

    அங்குள்ள கான்கிரீட் தளத்தில் பிறந்த சில நிமிடங்களே ஆன ஒரு ஆண் குழந்தை கட்டாந்தரையில் கிடந்து பசியுடன் கதறி அழுது கொண்டு கிடந்தது. குழந்தையை கண்ட பெண்கள் அங்கும்-இங்கும் பார்த்தனர். யாரும் இல்லை.

    மேலும் ஆண்கள் டார்ச் லைட் அடித்தபடி தேடினர். ஆனால் யாரும் இல்லை. அதே சமயம் அந்த கான்கிரீட் வீதியில் ஆங்காங்கே ரத்தக்கறை கிடந்தது. அந்த ரத்தம் கூட காயவில்லை.

    சில நிமிடங்களுக்கு முன்புதான் யாரோ ஒரு இளம்பெண் குழந்தையை பெற்றெடுத்து பிறகு அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டாள்.

    குழந்தை அழும் சத்தத்தை கேட்டு பரிதாபப்பட்ட அப்பகுதி மக்கள் அந்த பெண் யார்? என்று தேடுவதை விட்டு விட்டு குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து உடனடியாக 108 அவசர ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த ஆம்புலன்சு ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டனர். தொப்புள் கொடிக்கு முடிச்சு போட்டு கொண்டு குழந்தையை எடுத்து கொண்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்த குழந்தையை நடு தெருவில் பிரசவித்து போட்டு சென்ற இளம்பெண் யார்? கள்ளக்காதலில் அந்த குழந்தை பிறந்ததா? என்று போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சலங்கபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பெண்ணாகத்தான் இருக்க கூடும் என்றும் அந்த பகுதிகளுக்கும் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழந்தை பெற்று அங்கேயே இளம்பெண் போட்டுவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    Next Story
    ×