search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை நடந்த வீட்டில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்திய காட்சி
    X
    கொலை நடந்த வீட்டில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்திய காட்சி

    செங்கத்தில் வீடு புகுந்து மாமியார் - மருமகள் கொலை

    செங்கத்தில் மாமியார் - மருமகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கிரிபாளையத்தை சேர்ந்தவர்கள் அஷ்மத்பி (வயது 80). இவருடைய மருமகள் தில்ஷாத் (45). தேசிய நெடுஞ்சாலையோரம் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். தில்ஷாத்தின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்றிரவு 2 பேரும் வீட்டில் தூங்கினர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் எழவில்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் சாந்தி என்ற பெண், தில்ஷாத்தை எழுப்புவதற்காக அவரது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அஷ்மத்பியும், தில்ஷாத்தும் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சாந்தி கத்தி கூச்சலிட்டு கொண்டே வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அக்கம், பக்கம் வசிப்பவர்கள் திரண்டனர். திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி மற்றும் செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை பார்வையிட்டனர்.

    வீட்டு கூரையில் ஓடுகள் அகற்றப்பட்டிருந்தன. இதை வைத்து பார்க்கும்போது, இரவில் அஷ்மத்பி, தில்ஷாத் வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு தூங்கி உள்ளனர். நள்ளிரவில் மர்ம கும்பல், வீட்டு கதவை திறக்க முயற்சித்துள்ளனர்.

    கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், வீட்டு கூரை மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே குதித்துள்ளனர். அஷ்மத்பியும், தில்ஷாத்தும் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

    மர்ம கும்பல் ஆத்திரத்தில் மாமியார், மருமகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அஷ்மத்பி, அவரது மருமகள் தில்ஷாத்தை வலுகட்டாயமாக நிர்வாணமாக்கியுள்ளனர்.

    இதையடுத்து, அவர்கள் அணிந்திருந்த பாவாடையில் இருந்த நாடாவை உருவி எடுத்து, அதன் மூலம் 2 பேரின் கழுத்தையும் இறுக்கி துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    பிறகு, பிணங்களை வீட்டுக்குள்ளேயே வீசி விட்டு கொலையாளிகள், உள்பக்கமாக பூட்டியிருந்த கதவை திறந்து வெளியே தப்பிச் சென்றுள்ளனர்.

    உடல்கள் நிர்வாணமான நிலையில் கிடந்ததால், கற்பழிப்பு முயற்சியில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

    நள்ளிரவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதால், கொள்ளையர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டிய போது, மாமியார், மருமகளை தீர்த்து கட்டினரா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மோப்ப நாய், சம்பவம் நடந்த வீட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டன. இதையடுத்து, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, மாமியாரும், மருமகளும் கொள்ளை முயற்சியில் கொலை செய்யப்பட்டனரா? அல்லது அறிமுகமான நபர்களால் கற்பழிக்கப்பட்டு தீர்த்து கட்டப்பட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கொலை கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், பக்கிரிபாளைம் கூட் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.



    Next Story
    ×