search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரை அருகே கார் டிரைவர் கொன்று புதைப்பு: கள்ளக்காதலி தீர்த்துக் கட்டினார்
    X

    ஊத்தங்கரை அருகே கார் டிரைவர் கொன்று புதைப்பு: கள்ளக்காதலி தீர்த்துக் கட்டினார்

    ஊத்தங்கரை அருகே கள்ளக்காதல் தகராறில் கார் டிரைவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள சையத் நகரை சேர்ந்தவர் சாதிக்பாஷா. இவரது மகன் சதாம் உசேன் (வயது 26), கார் டிரைவர்.

    மேலும் இவர் சிங்காரப்பேட்டையில் ஆட்டோ கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வந்தார். ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த தொழில் மூலம் அவருக்கு வருமானம் அதிக அளவில் கிடைத்தது.

    இவர் கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென ஊத்தங்கரை அருகே மகனூர்பட்டி பகுதியை சேர்ந்த மகபூப் என்பவர் தான் சதாம் உசேனை அடித்து கொலை செய்து உடலை மகனூர்பட்டி பகுதியில் உள்ள ஒரு கேபிள் குழியில் புதைத்துள்ளதாக கூறி சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இது பற்றி ஊத்தங்கரை டி.எஸ்.பி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. அர்ஜூனன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் போலீஸ் நிலையத்துக்கு வந்து வாலிபர் மகபூப் விடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    எனது உறவுக்கார பெண் சபனா(30) என்பவருக்கும் கார் டிரைவர் சதாம் உசேனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது.

    சபனா எனது அத்தை மகள் ஆவார். அவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சதாம் உசேன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சபனாவுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

    ஒரு கட்டத்தில் அவர் சபனாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் சபனாவை அழைத்து சத்தம் போட்டேன். பின்னர் அவர்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய தொடங்கியது.

    இதனை அறிந்த சதாம் உசேன் கள்ளக்காதலை கைவிட்டு எதுவும் தெரியாததை போல் ஒதுங்கி கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சபனா அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து என்னை உதவிக்கு அழைத்தார். நானும் அவரை பழி வாங்க துடித்துக் கொண்டிருந்தேன்.

    சம்பவத்தன்று சதாம் உசேனை நைசாக பேசி அழைத்து வந்தேன். பின்னர் சபனாவுடன் சேர்ந்து நான் அவரை அடித்துக் கொலை செய்து உடலை நாங்கள் இருவரும் மகனூர்பட்டி அரசு பள்ளி அருகில் உள்ள புளியந்தோப்பு பகுதிக்கு கொண்டு சென்று அங்கு தோண்டப்பட்டிருந்த கேபிள் குழியில் புதைத்தோம்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து டி.எஸ்.பி. அர்ஜூனன் தலைமையிலான போலீசார் இன்று காலை சபனாவையும், மகபூப்பையும் அழைத்துக் கொண்டு பிணம் புதைக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ஊத்தங்கரை மருத்துவ குழுவினரும் அங்கு சென்றனர்.

    கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை மகபூப் அடையாளம் காட்டினார். பின்னர் போலீசார் குழியை தோண்டி சதாம் உசேன் உடலை மீட்டனர். சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு மேல் ஆனதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே சதாம் உசேன் உடலை மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×