search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருங்கல் அருகே 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்
    X

    கருங்கல் அருகே 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்

    கருங்கல் அருகே தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவியை உறவுக்கார வாலிபர் கடத்தி சென்று கற்பழித்துள்ளார். இகு குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    பள்ளியாடி:

    கருங்கல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீடு அருகே தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார். அதன்பின்பு அந்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதறிபோன பெற்றோர் மாணவியை தேடினர். அவரின் தோழிகளிடமும் விசாரித்தனர். அப்போது மாணவியை உறவுக்கார வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது.

    அந்த வாலிபரை தேடிய போது அவரை காணவில்லை. அதன்பின்பு அந்த மாணவி மட்டும் அழுதபடியே வீடு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்த போது உறவுக்கார வாலிபர் தன்னை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அருகில் உள்ள கல்குவாரியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியுடன் சென்று கருங்கல் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் அந்த வாலிபர் பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகி இருப்பது தெரியவந்தது. கட்டிட தொழிலாளியான அவர் நேற்று மாணவியை வெளியே அழைத்து சென்றது தெரியவந்தது.

    அவரை போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் ஒரு இடத்தில் அனாதையாக கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×