search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை சிறைகளில் உணவு கிடைக்காமல் தவித்தோம்: காரைக்கால் திரும்பிய மீனவர்கள் பேட்டி
    X

    இலங்கை சிறைகளில் உணவு கிடைக்காமல் தவித்தோம்: காரைக்கால் திரும்பிய மீனவர்கள் பேட்டி

    இலங்கை சிறைகளில் நாங்கள் இருந்த போது உணவு கிடைக்காமல் தவித்தோம், மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து எங்களது படகுகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று காரைக்கால் திரும்பிய மீனவர்கள் கூறினர்.
    காரைக்கால்:

    கடந்த மே , ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 92 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகளின் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    மத்திய அரசும், இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த மீனவர்களில் முதற்கட்டமாக 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்தது.

    அதை ஏற்று மன்னார் மற்றும் ஊர்க்காவல் துறை கோர்ட்டுகள் 77 மீனவர்களையும் விடுதலை செய்து கடந்த ஜூலை 28-ந் தேதியன்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 மீனவர்களும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 66 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.



    விடுதலை ஆன மீனவர்கள் 77 பேர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் மீனவர்கள் அனைவரும் இலங்கை கடற்படை கப்பல் மூலம் மதியம் 12 மணியளவில் சர்வதேச கடல் எல்லைக்கு கொண்டு வரப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    அவர்களை ஏற்றிக் கொண்டு இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சாரங்ரோந்து கப்பல் நேற்று இரவு 12.30 மணிக்கு காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.

    இலங்கையில் இருந்து வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர், நம்புதளை மீனவர்கள் 6 பேர், மண்டபம் மீனவர்கள் 12 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 18 பேர், காரைக்கால் மீனவர்கள் 17 பேர், நாகை மீனவர்கள் 8 பேர் என மொத்தம் 77 மீனவர்களையும் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மைய கமாண்டன்ட் சோமசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.

    காரைக்கால் திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    நாங்கள் இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தோம். அப்போது இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் புகுந்து எங்களை கைது செய்தனர். ஆனால், அவர்கள் நாங்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி எங்களை கைது செய்வதாக அறிவித்தனர். நாங்கள் இலங்கை சிறையில் இருந்த போது உணவு கிடைக்காமல் தவித்தோம். எங்களுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை.

    மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கையால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். எங்களது படகுகள் இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். எங்களுக்கு மீன்பிடி தொழில் தவிர வேறு எதுவும் தெரியாது. எங்களது படகுகளை மீட்டு தந்தால்தான் நாங்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியும்.

    எனவே, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து எங்களது படகுகளை மீட்டு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

    அதன் பின்னர் அவர்கள் தமிழக அரசு சார்பில் அவர்களது சொந்த ஊர்களுக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×