search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 வாரத்தில் 6 அடி உயர்ந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 2 வாரத்தில் 6 அடி உயர்ந்தது

    மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 26.32 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 6 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாலும் அணையின் பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து காவிரியில் 6 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு ஆயிரத்து 837 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 2 ஆயிரத்து 207 கன அடியாக அதிகரித்தது.

    இன்று மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு 2 ஆயிரத்து 507 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்றை விட இன்று 300 கன அடி வீதம் நீர் கூடுதலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டமும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 25.95 அடியாக இருந்தது. இன்று காலை இது 26.62 அடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 8-ந்தேதி அணையின் நீர்மட்டம் 20.9 அடியாக இருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர் மட்டம் 26.32 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 6 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணைக்கு வரும் நீர் வரத்தை விட நீர் திறப்பு குறைவாக உள்ளதால் அணை நீர்மட்டம் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் தண்ணீர் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×