search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருகே கள்ளக்காதலி வெட்டிக் கொலை: வாலிபர் வெறிச்செயல்
    X

    திருவண்ணாமலை அருகே கள்ளக்காதலி வெட்டிக் கொலை: வாலிபர் வெறிச்செயல்

    திருவண்ணாமலை அருகே கள்ளக்காதலியை வெட்டிக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் நா.கெங்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வின் இமா குலேட் (வயது 39). இவரது கணவர் சரவணன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    2 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பிறகு கருத்து-வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சரவணன் திருப்பூர் சென்று விட்டார். ஜோஸ்வின் இமாகுலேட் 12 ஆண்டுகளாக கணவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவர்களுக்கு மேரி சுஷீன் (18) என்ற ஒரு மகளும், ஜோவான் (15) என்ற ஒரு மகனும் உள்ளனர். 2 பேரும், ஜோஸ்வின் இமா குலேட் அரவணைப்பில் தான் இருந்தனர். மகள் வேலூரில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.

    மகன், வேட்டவலத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த சார்லஸ் (25) என்ற வாலிபருடன் ஜோஸ்வின் இமாகுலேட்டுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    கள்ளக்காதலனை இரவு நேரத்தில் வீட்டிற்கு வர வழைத்து அவர் தனிமையில் சந்தித்துள்ளார். இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளக் கோரி ஜோஸ்வின் இமா குலேட்டை கள்ளக்காதலன் சார்லஸ் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலன் எல்லை மீறி நடந்து கொண்டதால், அவரிடம் இருந்து ஜோஸ்வின் இமா குலேட் விலக ஆரம்பித்தார். பேசுவதை முழுவதுமாக தவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், ஜோஸ்வின் இமா குலேட்டை கொலை செய்ய திட்டமிட்டார். அதன் படி, நள்ளிரவு அவரது வீட்டுக்குள் கள்ளக்காதலன் சார்லஸ் அரிவாளுடன் புகுந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த ஜோஸ்வின் இமா குலேட்டின் தலையில் அரிவாளால் 2 முறை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடி இறந்தார். கள்ளக் காதலியை வெட்டிக் கொன்ற ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் சார்லஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    தாயின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த மகன் அலறி அடித்து எழுந்தார். ஓடி வந்து பார்த்த போது, தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தினர் வேட்டவலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் சார்லஸை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×