search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஆவின் அலுவலகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7½ லட்சம் கொள்ளை
    X

    மதுரை ஆவின் அலுவலகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7½ லட்சம் கொள்ளை

    மதுரை ஆவின் அலுவலகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7½ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் கள் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை பீ.பி. குளத்தில் ஆவின் நிறுவன வசூல் மையம் உள்ளது. இங்கு தல்லாகுளம், தபால் தந்தி நகர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆவின் முகவர்கள் தங்கள் விற்பனை வசூல் தொகைகளை செலுத்துவார்கள்.

    நேற்று வசூல் சேகரிப்பு பணியில் பெண் ஊழியர் உள்பட 3 பேர் இருந்தனர். மாலை 6 மணி அளவில் அந்த மையத்துக்குள் 25 வயது மதிக்கத்தக்க 3 மர்ம நபர்கள் கையில் பட்டாக்கத்தியுடன் சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்த ஊழியர்களை கத்திமுனையில் கொலை செய்து விடுவதாக மிரட்டியபடி அங்கிருந்த வசூல் பணம் ரூ.7½ லட்சத்தை எடுத்துக்கொண்டு சினிமாவை மிஞ்சும் வகையில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

    இதுகுறித்து ஆவின் சூப்பர்வைசர் ரவி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. நிபுணர்களும் கைரேகை தடயங்களை பதிவு செய்தனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×