search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
    X

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி சேலத்தில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    சேலம்:

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க கேட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை உடனயடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி 27-ந் தேதி மாலை சேலம் கிழக்கு மாவட்டம் , மேற்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    27-ந் தேதி காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் மு.க.ஸ்டாலின் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கெங்கணாபுரம் பகுதியில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏரியை பார்வையிடுகிறார்.

    பின்னர் அங்கிருந்து சேலம் மாநகருக்கு வரும் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
    Next Story
    ×