search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவியை வெட்டி கொன்ற காதலன் போலீசில் சரண்
    X

    திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவியை வெட்டி கொன்ற காதலன் போலீசில் சரண்

    ஆரணி அருகே திருமணத்துக்கு மறுத்ததால் கல்லூரி மாணவியை வெட்டி கொன்ற காதலன் போலீசில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மலையாம்பட்டு காலனியை சேர்ந்தவர் மதியழகன் முன்னாள் ராணுவவீரர். இவரது மகள் மோனிகா (வயது20). வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் தங்கி பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஆரணி அடுத்த ஈச்சந்தாங்கல் ஏரியில் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    மேலும் இதுபற்றி கல்லூரி நிர்வாகத்துக்கு, போலீசார் தகவல் தெரிவித்து விசாரித்தனர். அப்போது, அந்த மாணவி நேற்று கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. அவருடன் படிக்கும் சக மாணவிகளிடம், செல்போன் மூலமாக போலீசார் விசாரித்தனர்.

    மாணவி மோனிகா எதற்காக கொலை செய்யப்பட்டார். ஏரியில் வைத்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எங்கேயோ கொலை செய்து பிணத்தை கொண்டு வந்து ஏரியில் வீசினார்களா? மேலும் மதியழகனுக்கு மற்றவர்களுடன் முன்விரோதம் உள்ளதா? அதன் காரணமாக மாணவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து ஆரணி தாலுகா போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இந்த நிலையில் ஆரணி அடுத்த புங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த கோகுல்நாத் (20) என்பவர் கல்லூரி மாணவியை கொலை செய்ததாக போளூர் போலீஸ் நிலையத்தில் இரவில் சரணடைந்தார்.

    அவரிடம் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோகுல்நாத் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். பள்ளியில் படிக்கும் போது மோனிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. மோனிகா காட்பாடி கல்லூரி விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்த பிறகும் இருவரும் போனில் பேசி காதலை வளர்த்தனர். மோனிகாவை திருமணம் செய்ய கோகுல்நாத் முடிவு செய்தார். அவரது பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். அவர்கள் பெண்தர மறுத்தனர்.

    பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால் மோனிகா கோகுல்நாத்திடம் பேசுவதை குறைத்தார். அத்துடன் காதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததாக தெரிகிறது.

    நேற்று காலை மோனிகாவின் தோழிகள் மூலமாக கோகுல்நாத் போனில் தொடர்பு கொண்டுள்ளார். தனியாக பேச வேண்டுமென கூறி ஈச்சந்தாங்கல் ஏரிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோகுல்நாத் கத்தியால் மோனிகாவின் கழுத்தில் பின்பகுதியில் வெட்டி சாய்த்தார். தரையில் விழுந்து துடிதுடித்த அவரை உடலில் பல இடங்களில் மாறி மாறி குத்தியுள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்தபின் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக போலீசாரிடம் கோகுல்நாத் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×