search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுக்கு பிறகு முழுமையாக வறண்டது
    X

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுக்கு பிறகு முழுமையாக வறண்டது

    சென்னை குடிநீர் வழங்கும் புழல் ஏரி முற்றிலும் வறண்டது. 13 ஆண்டுக்கு பிறகு இப்போது தான் புழல் ஏரி முற்றிலுமாக வறண்டு இருக்கிறது.
    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

    பருவ மழை பொய்த்து போனதால் 4 ஏரிகளிலும் நீர்மட்டம் அடியோடு குறைந்துவிட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு போனது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிகளில் மொத்தம் 108 மில்லியன் கனஅடி மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 3757 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.

    சென்னை குடிநீருக்கு ஏரிகளில் இருந்து தண்ணீர் சப்ளை குறைக்கப்பட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனை சமாளிக்க மாற்று வழியை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

    கல்குட்டை நீர், போரூர் ஏரி நீரை சுத்திகரித்து வழங்கி வருகிறார்கள். இதனை கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு மட்டுமே சமாளிக்க முடியும் நிலை உள்ளது.

    புழல் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் குட்டை போல் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அனுப்பி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தண்ணீரையும் அனுப்ப முடியாத அளவுக்கு நீர்மட்டம் குறைந்தது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி தற்போது ஏரி முற்றிலும் வறண்டது. இதனால் ஏரிப்பகுதி முழுவதும் மணல் மேடாக காட்சி அளிக்கிறது. சோழவரம் ஏரிக்கு பின்னர் புழல் ஏரி வறண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முன்பு 2004-ல் இதேபோல் புழல் ஏரி வறண்டது. 13 ஆண்டுக்கு பிறகு இப்போது தான் புழல் ஏரி முற்றிலுமாக வறண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியில் 21 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதனை சென்னை குடிநீருக்கு அனுப்ப முடியாததால் கடந்த மாதமே தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. பூண்டி ஏரியும் வேகமாக வறண்டு வருகிறது.

    தற்போது செம்பரம் பாக்கம் ஏரியில் 87 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. இந்த ஏரியில் இருந்து மட்டும் சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    கடந்த வாரம் பெய்த மழையால் ஒரே நாளில் ஏரியில் 17 மில்லியன் கனஅடி தண்ணீர் அதிகரித்து இருந்தது. மீண்டும் மழை பெய்தால் மட்டுமே சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் நிலை உருவாகி இருக்கிறது.


    Next Story
    ×