search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் மரணம்
    X

    விருதுநகர் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் மரணம்

    விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த பெண், ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டை - கள்ளிக்குடி இடையேயான தண்டவாளப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிணமாக கிடப்பதாக விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த பெண் பச்சை நிற லெகின்சும், பச்சை-மஞ்சள் நிற மேலாடையும் பச்சை கலர் துப்பட்டாவும் அணிந்திருந்தார்.

    அவரது கழுத்தில் பொட்டுத்தாலி காணப்பட்டது. எனவே அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் கருதினர். மேலும் அந்தப் பெண் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது விருதுநகர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு 3 பெண்களும் ஒரு வாலிபரும் வந்தனர். அவர்கள் தங்களுடன் வந்த இளம்பெண்ணை காணவில்லை என புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இளம்பெண் உடலை போலீசார் காண்பித்தபோது, அவர்கள் தேடியது அவர்தான் என தெரியவந்தது. மேலும் பிணமாக கிடந்த பெண் பெயர் அனுசுயா தேவி (வயது 19) என்பதும், இவர் கடந்த 5-ந்தேதி சென்னையில் காதல் திருமணம் செய்தவர் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் மேலும் வெளியான தகவல்கள் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவரது மகள் அனுசுயா தேவி. திருமணமான 10 நாளில் கணவரை பிரிந்து விட்டார். அதன்பிறகு தூத்துக்குடி மாவட்டம் கீழக்கரந்தையை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சதீஷ்குமார் (30) என்ற உறவுக்கார வாலிபருடன் அனுசுயா தேவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்தப்பழக்கம் காதலாக மாறியது. சென்னை எழும்பூரில் உள்ள சுவீட் கடையில் வேலை பார்த்த சதீஷ்குமார், அனுசுயா தேவியை சென்னைக்கு அழைத்துச் சென்று, கடந்த 5-ந்தேதி திருமணம் செய்தார்.

    தகவல் கிடைத்ததும் சதீஷ்குமாரின் தாய் ராஜம்மாள், பாட்டி, சின்னம்மா, சகோதரி லட்சுமி ஆகியோர் சென்னை சென்று புதுமண ஜோடியை சமரசம் செய்தனர். அதன் பிறகு அனைவரும் சதீஷ்குமார் ஊருக்கு செல்ல சென்னையில் இருந்து சாத்தூருக்கு முன் பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர்.

    அப்போது அனுசுயா தேவி படிக்கட்டு அருகே இருந்ததாகவும் மற்றவர்கள் உள்ளே இருந்ததாகவும் தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அனுசுயா தேவி இறந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தவறி விழுந்துதான் இறந்தாரா? தற்கொலை செய்தாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×