search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட பாவாடை, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா.
    X
    கைது செய்யப்பட்ட பாவாடை, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா.

    கள்ளக்காதல் விவகாரம்: 6 மாத கர்ப்பிணி மனைவியை கோர்ட்டு வளாகத்தில் வெட்டிய கணவர்

    கோர்ட்டு வளாகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவரே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறிஞ்சிகொல்லையை சேர்ந்தவர் பாவாடை (வயது 36). இவரது மனைவி நதியா (22). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    பாவாடை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நதியாவுக்கும், எறும்பூரைச் சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் (22) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 7 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பாவாடை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். மனைவியை கண்டித்தார். உடனே, நதியா கோபம் அடைந்து தனது கள்ளக்காதலன் சுபாஷ் சந்திரபோசுடன் சென்று விட்டார்.

    இது தொடர்பாக பாவாடை சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையம் மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் தனது மனைவி நதியா நகை-பணத்துடன் மாயமாகி விட்டார். அவரை கண்டு பிடித்து ஒப்படைக்கும்படி கூறியிருந்தார். ஆனால், போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த பாவாடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரது மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை மூலம் கடலூர் கோர்ட்டில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தை நாடி பாவாடை மற்றும் நதியா ஆலோசனை பெற அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி நேற்று மாலை பாவாடை கடலூர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்துக்கு வந்தார். அதன் பின்னர் நதியா தனது கள்ளக்காதலன் சுபாஷ் சந்திரபோஸ், அவருடைய தாய் மஞ்சுளா ஆகியோருடன் அங்கு வந்தார்.

    அங்கு வந்த நதியாவை பார்த்து பாவாடை ஆத்திரம் அடைந்தார். தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி நதியாவை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த சுபாஷ் சந்திரபோசின் தாய் மஞ்சுளாவையும் சரமாரியாக வெட்டி விட்டு ஓட முயன்றார்.

    அவரை அங்கு நின்றவர்கள் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த நதியா, மஞ்சுளா ஆகிய 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படுகாயம் அடைந்த நதியா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோர்ட்டு வளாகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவரே வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×