search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் குழந்தைகளுடன் வந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கைது
    X

    திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் குழந்தைகளுடன் வந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேர் கைது

    திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் குழந்தைகளுடன் வந்து திருடிய பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 குழந்தைகளும் யாருடையது? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள எஸ்.கொல்லூர் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி. இவரது மனைவி அம்பிகா (வயது 56). இவர், உறவினர்களுடன் மேல்மலையனூர் கோவிலுக்கு செல்வதற்காக நேற்றிரவு 8 மணியளவில் திருவண்ணாமலை பஸ் நிலையத்துக்கு வந்தார்.

    அங்கிருந்து, மேல்மலையனூர் செல்லும் பஸ்சில் அம்பிகா, உறவினர்களுடன் ஏற முயன்றார். அப்போது, கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி பின்புறம் நின்றிருந்த ஒரு பெண் அம்பிகாவின் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க தாலி செயினை லாவகமாக பறிக்க முயன்றார்.

    செயின் பறிக்கப்படுவதை சுதாரித்து கொண்ட அம்பிகா, சத்தம் போட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    விசாரணையில், திருவண்ணாமலை தேனி மலையை சேர்ந்த செல்லதம்பி மனைவி சாந்தி (49) என்பது தெரியவந்தது. மேலும் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த சாந்தியின் கூட்டாளிகளான தேனிமலையை சேர்ந்த சங்கர் மனைவி துர்கா (28), ஆரணி களம்பூரை சேர்ந்த கார்த்திக் (28), சூர்யா (30) ஆகிய மேலும் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பிடிபட்ட துர்காவிடம் 1½ வயதில் வெங்கடேசன் என்று பெயரிடப்பட்ட ஆண் கைக் குழந்தையும், கார்த்திக்கிடம் 3 வயதுடைய தனுஷ் என்ற குழந்தையும் இருந்தது. திருவண்ணாமலை கிழக்கு போலீசார் துர்கா உள்பட 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 குழந்தைகளும் யாருடையது? என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கிறார்கள்.

    கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 4 பேரும் யாருக்கும் சந்தேகம் வராத படி, குழந்தைகளை வைத்துக் கொண்டு கைவரிசை காட்டி வந்துள்ளனர். அருணாச லேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்லக் கூடிய பயணிகளை குறி வைத்து திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அசரும் நேரத்தில் அவர்களது உடமைகள், பொருட்களை பறித்து சென்றுள்ளனர். பயணிகள் பஸ்களில் ஏறும் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, செயின்களை பறித்துள்ளனர்.

    திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நடந்துள்ள பல்வேறு திருட்டு சம்பவங்களில் பிடிபட்ட 4 பேருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தருமபுரி, விழுப்புரம் பகுதிகளில் இருந்தும் திருட்டு கும்பல் குழந்தைகளுடன் வந்து, பல்வேறு குழுக்களாக பிரிந்து, கைவரிசை காட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து, வெளியூர் திருட்டு கும்பலை பிடிக்க திருவண்ணாமலை பஸ் நிலையம், அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×