search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 17 பேர் சிறைபிடிப்பு
    X

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 17 பேர் சிறைபிடிப்பு

    எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்தவர் செல்லதுரை. கோட்டுச்சேரியை சேர்ந்தவர் மணியன். இவர்களுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் காரைக் கால் பகுதியை சேர்ந்த 17 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நடுக்கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென்று அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்கள் 17 பேரையும் சிறைபிடித்தனர். மேலும் அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    சிறை பிடிக்கப்பட்ட 17 பேரும் காங்கேசன்துறை ராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 17 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்து அவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதேபோல் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேரும், நேற்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் அவர்களை வருகிற ஜூலை 6-ந் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே இலங்கை கடற்படையினர், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த பழனிக்குமார், கமல், கருப்புசாமி, ரமேஷ், ராஜூ ஆகிய 5 மீனவர்களை தாக்கி அவர்களுடைய படகிலேயே சிறை வைத்தனர். சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு அவர்களை எச்சரிக்கை செய்து விடுவித்துவிட்டனர்.

    Next Story
    ×