search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு வழக்கு: தலைமறைவான வாலிபரை பிடிக்க மும்பை விரைந்தது தனிப்படை போலீசார்
    X

    கொடநாடு வழக்கு: தலைமறைவான வாலிபரை பிடிக்க மும்பை விரைந்தது தனிப்படை போலீசார்

    கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் தலைமறைவான வாலிபரை கைது செய்ய தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்துள்ளனர்.
    கோவை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24-ந் தேதி நடந்த காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் பலியானார். இவரது கூட்டாளியான கோவையை சேர்ந்த சயன் பாலக்காட்டில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    தற்போது சயன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்களின் தீவிர சிகிச்சையின் பலனாக சயன் உடல்நலம் தேறி வருகிறார். சயனிடம் விபத்து தொடர்பாக கேரள போலீசாரும், காவலாளி கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவும் வாக்குமூலம் பெற்று விட்டனர். இன்னும் ஓரிரு நாளில் சயன் டிஜ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது. சயன் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரை கைது செய்து ஜெயிலில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த குட்டி என்கிற பிஜின்(வயது 26) என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். 20 நாட்களுக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வரும் அவர் கேரளாவில் இருந்து மும்பைக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்ய ஒரு தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்துள்ளனர்.

    கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு குறைக்கப்பட்டதே இந்த கொள்ளை சம்பவத்துக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. கொலை நடந்த மறுநாள் முதலே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பங்களாவுக்கு செல்லும் பாதையில் தடுப்பு வேலிகள் அமைத்து அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

    இந்தநிலையில் கொடநாடு பங்களாவில் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்டேட்டின் 4, 9 மற்றும் 10-வது எண் கொண்ட முக்கிய நுழைவு வாயில்களில் இரவு நேரங்களில் ஆயுதப்படை போலீசார் 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பகல் நேரத்தில் உள்ளூர் போலீசார் 3 பேர் இந்த நுழைவு வாயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொடநாடு செல்லும் சாலையில் கெரடாமட்டம் பகுதியில் அனைத்து வாகனங்களும் போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது. உளவுபிரிவு போலீசாரின் எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×