search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் சொத்து தகராறில் தாய்- மகள் வெட்டிக் கொலை: உறவினர் ஆத்திரம்
    X

    பழனியில் சொத்து தகராறில் தாய்- மகள் வெட்டிக் கொலை: உறவினர் ஆத்திரம்

    பழனியில் சொத்து தகராறில் தாய்-மகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி:

    பழனி போலீஸ் சரகம் உடுமலை ரோடு வி.கே.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவரது மனைவி தனலெட்சுமி (55), இவர்களது மகள் தமிழ்செல்வி (23) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்து மனநிலை பாதித்தது போல் காணப்பட்டார்.

    எனவே தனலெட்சுமி தனது கணவரை பிரிந்து மகள் தமிழ்செல்வியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். கால்நடைகளை வளர்த்து பால் கறந்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    மனைவியை விட்டு பிரிந்த மாரிமுத்து தனது தம்பி தண்டபாணி என்பவரது பராமரிப்பில் இருந்தார். தனலெட்சுமி வீடும் தண்டபாணி வீடும் அருகருகே உள்ளது. மாரிமுத்துக்கு சொந்தமாக 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலம் தொடர்பாக தனலெட்சுமிக்கும் மாரிமுத்துக்கும் அடிக்கடி பிரச்சினை எழுந்தது. அப்போது மாரிமுத்து என்னை பராமரித்து வரும் எனது தம்பி தண்டபாணிக்குத்தான் சொத்து முழுவதையும் எழுதி கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

    இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக பிரச்சினை வெடித்தது. எனவே இந்த பிரச்சினை கோர்ட்டுக்கு சென்றது. பழனி கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தனலெட்சுமிக்கு சாதகமாக தீர்ப்பு வருவதாக தெரியவந்துள்ளது.

    இதனை அறிந்த தண்டபாணி நேரடியாக தனது அண்ணன் மனைவி தனலெட்சுமியிடம் சென்று வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினார். ஆனால் தனலெட்சுமி மறுத்து விட்டார்.

    இன்று காலை தனலெட்சுமி வழக்கம் போல் பால் கறந்து விட்டு வீடு வீடாக பால் சப்ளை செய்து விட்டு வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தண்டபாணி அரிவாளால் தனலெட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    ஆனாலும் தண்டபாணியின் ஆத்திரம் தீர வில்லை. 8 ஏக்கர் சொத்துக்கு ஒரே வாரிசாக தனது அண்ணன் மகள் தமிழ்செல்வி உள்ளார். எனவே அவரையும் தீர்த்து கட்டினால் சொத்து முழுவதும் தனக்கு வந்து விடும் என எண்ணினார்.

    எனவே வீட்டுக்குள் தமிழ்செல்வி தூங்கிக் கொண்டு இருப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். உடனே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த தமிழ்செல்வியை சரமாரியாக வெட்டினார். இதில் அவரும் துடிதுடித்து இறந்தார்.

    உடனே தண்டபாணி, தனது அண்ணன் மாரிமுத்துவை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறி விட்டார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனை அறிந்த ஏராளமானோர் ஒன்று திரண்டனர். இது குறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட தாய் மகள் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது தொடர்பாக தண்டபாணியின் மகன்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

    கொலையுண்ட தமிழ்செல்விக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. திருமணமாகி விட்டால் சொத்து முழுவதும் தமிழ்செல்விக்கே சென்று விடும் என்பதால் தண்டபாணி இந்த கொலையை செய்திருந்நது தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×