search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராவூரணி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    பேராவூரணி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை

    பேராவூரணி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கனகா (வயது 26). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

    இந்த நிலையில் முருகேசன் கனகாவை வீட்டில் சென்று வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமை படுத்தியுள்ளார். இதனால் கனகா கடந்த ஒரு வருடத்திற்கு முன் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தன் கணவர் மற்றும் அவரது தம்பி செந்தில்குமார், சகோதரிகள் சாந்தி, சுமதி ஆகியோர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புகார் தெரிவித்திருந்தார்.

    இருந்த போதிலும் முருகேசன் எதையும் பொருட்படுத்தாமல் வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து வந்த கனகா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பேராவூரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கனகா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சேது பாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகேசன் - கனகாவிற்கு திருமணம் முடிந்து 6½ வருடம் ஆகிறது. இந்த நிலையில் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×