search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குளத்தில் சிக்கிய கொள்ளையர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை
    X

    ஆலங்குளத்தில் சிக்கிய கொள்ளையர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை

    ஆலங்குளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 7 கார்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதனைத்தொடர்ந்து திருட்டில் ஈடுபடும் கும்பலை பிடிக்க ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் சப்--இன்ஸ்பெக்டர்கள் இம்மானுவேல், செபஸ்டின் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், சுப்பிரமணியன், ஏட்டுகள் பால்துரை, நயினார், பாலசுப்பிரமணி, புவனேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் திருட்டு கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், அவர்கள் மதுரை கூடல் நகரை சேர்ந்த வெற்றிவேல் என்ற கண்ணன்(வயது 28), நெல்லை தாழையூத்தை சேர்ந்த அல்போன்ஸ்(40) என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீடு புகுந்து நகை-பணத்தை திருடியதும், வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    ஆலங்குளத்தில் 2 கார்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் வாகன விற்பனையகத்தில் 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், அஞ்சுகிராமத்தில் 3 வீடுகளில் சுமார் 57 பவுன் நகைகள், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செல்போன் கடையில் புகுந்து செல்போன்கள், சூளக்கரையில் வீடு புகுந்து நகை-பணம் மற்றும் கோவில்பட்டியில் ஒரு வீட்டில் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் திருடி உள்ளனர்.

    மதுரையில் ஒரு கார் விற்பனை ஷோரூமில் ஒரு கார் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், ஒரு வீட்டில் வைர நகைகள் மற்றும் ஒரு காரையும், திண்டுக்கல், பழனியில் தலா ஒரு காரையும், கரூர் டவுனில் 4 வீடுகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தையும், கோவை பெரியநாயக்கம்பட்டியில் ஒரு காரையும், திருச்சி திருவெறும்பூரில் ஒரு கார், மோட்டார் சைக்கிளையும், காரைக்குடியில் ஒரு காரையும் திருடியது தெரிய வந்து உள்ளது.

    இதையடுத்து வெற்றிவேல், அல்போன்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மொத்தம் 7 கார்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. அதில் ஆலங்குளத்தில் திருட்டு போன 2 கார்களும் அடங்கும். இந்த திருட்டு வழக்குகளில் நெல்லை அருகே ராமையன்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    இந்த திருட்டு வழக்குகளில் ஏற்கனவே விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டாணாவை சேர்ந்த முத்துகுமார் (30), அம்பை அருகே உள்ள பள்ளக்கால்பொதுக்குடி மெயின்ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்து உள்ளனர்.

    திருட்டு வழக்குகளில் கைதானவர்கள் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றாலும் சிறையில் இருந்தபோது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்குகளில் இவர்களை தவிர மேலும் யாருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட அய்யப்பன் என்பவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அய்யப்பனை வலைவீசி தேடி வருகின்றனர். இவர் பிடிபட்டால் இந்த சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என தெரிகிறது. அய்யப்பனிடம் 3 திருட்டு கார்களும், 100 பவுன் நகைகளும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களை பிடித்த இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
    Next Story
    ×