search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பத்தூரில் நகைக்கடையில் நூதன முறையில் நகை திருடிய பெண்
    X

    அம்பத்தூரில் நகைக்கடையில் நூதன முறையில் நகை திருடிய பெண்

    அம்பத்தூரில், நகைக்கடையில் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலியை பெண் ஒருவர் திருடிச் சென்றார். கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த பெண்ணின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவடி:

    அம்பத்தூர் வெங்கடாபுரம், தேவராஜநாயுடு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). அதே பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன் தினம் மாலை பெண் ஒருவர் நகை வாங்க வந்தார்.

    அவர் கடையில் இருந்த விக்னேஷிடம் 5 பவுன் தங்க சங்கிலி வேண்டும் என கேட்டார். இதனையடுத்து விக்னேஷ் 10-க்கும் மேற்பட்ட மாடல்களில் சங்கிலியை எடுத்து காட்டியுள்ளார்.

    ஒவ்வொரு சங்கிலியையும் தனித்தனியாக எடுத்து தனது கழுத்துக்கு அருகில் வைத்து தனக்கு எது பொருத்தமாக உள்ளது என அந்த பெண் பார்த்துள்ளார். பின்னர் இது தவிர வேறு மாடல் சங்கிலியை கொடுங்கள் என கடைக்காரரிடம் கேட்டார்.

    இதனை தொடர்ந்து வேறு சங்கிலியை எடுப்பதற்காக விக்னேஷ் கீழே குனிந்தார். அப்போது அந்த பெண் தான் ஏற்கனவே பார்ப்பதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க சங்கிலி ஒன்றை நைசாக தனது சேலைக்குள் மறைத்து வைத்தார்.

    பின்னர் அவர், விக்னேஷிடம் “இந்த மாடல்கள் எனக்கு பிடிக்கவில்லை பிறகு வருகிறேன்” என்று கூறி விட்டு கடையில் இருந்து வெளியே சென்றார். பின்பு அங்கு தயாராக நின்றிருந்த ஆட்டோவில் ஏறி சென்றார்.

    அந்த பெண் சென்ற உடன் சங்கிலிகளை எண்ணிப் பார்த்த விக்னேஷ் அதில் ஒரு சங்கிலி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அந்த பெண், சங்கிலியை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.

    இதனால் பதறிப்போன விக்னேஷ் கடைக்கு வெளியே வந்து அந்த பெண்ணை தேடினார். ஆனால் அவரை காணவில்லை.

    இதையடுத்து கடைக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அந்த பெண் சங்கிலியை திருடி சேலைக்குள் மறைத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து விக்னேஷ் நேற்று அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த பெண்ணின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×