search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் பலியான சக்திவேல்-ஜோதி
    X
    விபத்தில் பலியான சக்திவேல்-ஜோதி

    திருமங்கலம் அருகே புதுமண தம்பதி விபத்தில் பலி

    திருமங்கலம் அருகே மினிலாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதியினர் பரிதாபமாக இறந்தனர். திருமணமான 4 மாதத்தில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பேரையூர்:

    மதுரை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவருக்கும், ஜோதி (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இருவரும் காரியாபட்டி அருகே ஆவியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி 2 பேரும் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ஆவியூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    திருமங்கலம் அருகே பாறைபத்தி டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேல் 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடிக்கு சென்ற மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் பிரபு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 4 மாதத்தில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×