search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள்: மு.க.ஸ்டாலின்
    X

    அரசு துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள்: மு.க.ஸ்டாலின்

    அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்கள் குறித்து என்னிடம் துப்பு கொடுங்கள் என்று ஆற்காடு வீராசாமி முத்து விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி-கஸ்தூரி தம்பதியரின் ‘முத்து விழா’ சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

    எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் வரவேற்றார். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கருணாநிதியின் அமைச்சரவையில் 3 முறை மின்துறை அமைச்சராகவும், உணவுத்துறை அமைச்சராகவும், கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியவர் ஆற்காடு வீராசாமி.

    இன்றைக்கு தமிழகத்தில் எந்த துறையில் பார்த்தாலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அரசு துறைகளில் எந்த இடத்தில் ஊழல் நடந்தாலும் அதை வெளிக்கொணர அங்குள்ள தி.மு.க. உணர்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். என்னை சந்தித்து அந்த தகவல்களை கொடுக்கலாம்.



    கருணாநிதியிடம் அமைச்சராக பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கு தனி குணம் வேண்டும். இப்போதுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் போல் நாளுக்கு ஒரு தலைமையை மாற்றி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் தனிக்குணம் அல்ல. ஊழல் மட்டுமே ஒரே பணி என்று இன்றைக்கு நாற்காலி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அணிகளில் உள்ளவர்களின் தனிக்குணம் போல் அல்ல.

    சென்னையில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது, மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி விவாதிக்க அமைச்சர்கள் கூடவில்லை. அடுத்த 4 வருடத்திற்கு யாரை முன்னிறுத்தி வசூல் செய்வது? யாருடன் சேர்ந்து ஆட்சியில் கொள்ளையடிப்பது? இதற்காகத்தான் இன்றைக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் கூடி பேசி கூத்தடிக்கிறார்கள்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

    விழாவில் ஆற்காடு வீராசாமி சிறப்பு தபால்தலையை புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட, முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார். சிறப்பு மலரை மு.க.ஸ்டாலின் வெளியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்றுக்கொண்டார். ஆற்காடு வீராசாமி ஏற்புரை வழங்கினார். அவருடைய மகன் டாக்டர் வீ.கலாநிதி நன்றி கூறினார்.
    Next Story
    ×