search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருமங்கலம் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

    கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது. போலீசுக்கு தெரியாமல் அவர்களது உடலை எரித்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள சின்னாரெட்டிபட்டியை சேர்ந்தவர் அய்யனார், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நாகஜோதி (வயது 27).

    அய்யனாரின் அக்காள் சித்திரைக்கனி. கணவர் பிரிந்து சென்றதால் தனது மகன் அஜித்துடன் (22) அய்யனார் வீட்டில் வசித்து வந்தார். அஜித் திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நாகஜோதிக்கும், அஜித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் இல்லாத நேரத்தில் இரண்டு பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு இவர்களது கள்ளக்காதல் குறித்து அய்யனாருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அக்காள் சித்திரைக்கனியையும், அஜித்தையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்.

    நேற்று எஸ்.கிருஷ்ணாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டை பார்க்க அய்யனார் சென்று விட்டார். வீட்டில் நாகஜோதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அஜித், நாகஜோதியுடன் தனிமையில் நீண்டநேரம் பேசியதாக தெரிகிறது.

    இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடி வெடுத்தனர். அதன்படி வீட்டிலேயே நாகஜோதியும் -அஜித்தும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்கப்படாததை கண்டு அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது 2 பேரும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அய்யனார் வீட்டிற்கு விரைந்து வந்தார். உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் நாகஜோதி -அஜித் உடல்களை எரித்தனர். போலீசுக்கு தெரியாமல் உடல்கள் எரிக்கப்பட்டது குறித்து சின்னாரெட்டிபட்டி கிராம நிர்வாக அதிகாரி அழகுபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து அவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அய்யனார், அவரது அண்ணன் தெய்வம், அக்காள் சித்திரைக்கனி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரமும், போலீசுக்கு தெரியாமல் உடல்களை எரித்த சம்பவமும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×