search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் அடித்து கொலை: கணவன் வெறிச்செயல்
    X

    வில்லியனூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் அடித்து கொலை: கணவன் வெறிச்செயல்

    வில்லியனூர் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் புதுகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 32). மாட்டு வண்டி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த மயூரி (30) என்ற பெண்ணும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு புவனேஸ்வரி (12) என்ற மகளும், மகேஸ்வரன் (10) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள ராஜேந்திரன் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

    அதுபோல் இன்று காலை ராஜேந்திரன் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்று விற்று விட்டு அந்த பணத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது மயூரியிடம் சாப்பாடு பரிமாறும்படி ராஜேந்திரன் கேட்டார். அதற்கு மயூரி தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்யும் உங்களுக்கு சாப்பாடு ஒரு கேடா? என்று கூறியபடி தட்டில் சாப்பாடு போட சென்றார்.

    மனைவி கேவலப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் அருகில் கிடந்த மணல் வாரும் இரும்பு தட்டை எடுத்து மயூரியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயூரி அதே இடத்தில் இறந்து போனார்.

    மனைவி இறந்து போனதால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் பயந்து போனார். போலீசில் இருந்து தப்பிக்க மயூரி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆட மயூரியின் உடலை தூக்கில் தொங்க விட்டார். பின்னர் அங்கிருந்து தப்பி செல்ல வீட்டில் இருந்து வெளியேறினார்.

    இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன், சத்ய நாரா யணா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தப்பி செல்ல முயன்ற ராஜேந்திரனை அவர்கள் கைது செய்தனர். பின்னர் மயூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதலியார்பேட்டையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில் வில்லியனூர் அருகே குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த பெண்ணை கணவன் அடித்து கொன்ற சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

    Next Story
    ×