search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவனை கடத்திய வாலிபரை தனிப்படையினர் நெருங்கினர்: தாய் திடீரென மாயமானதால் பரபரப்பு
    X

    சிறுவனை கடத்திய வாலிபரை தனிப்படையினர் நெருங்கினர்: தாய் திடீரென மாயமானதால் பரபரப்பு

    திருச்சி மணப்பாறையில் கடத்தப்பட்ட சிறுவனை 10 தனிப்படையினர் தேடி வருகின்றனர்.இந்நிலையில் சிறுவனின் தாய் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மணப்பாறை:

    திருச்சி அரபு குளசந்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி.இவர்களது மகன் சாய்தர்‌ஷன்(வயது 2) . முத்துலட்சுமியின் தாய் வசந்தா, மணப்பாறை அத்திக்குளம் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது அவருடன் முத்துலட்சுமியும், அவரது மகனும் வசித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சாய்தர்‌ஷனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கடத்தி சென்றார். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவனை மீட்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்நிலையில் கரூர் மாவட்டம், தோகைமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியில், வாலிபர் ஒருவர் ஊதா நிற மோட்டார் சைக்கிளில் சிறுவனை முன்னாள் வைத்து அழைத்து சென்றது தெரியவந்தது. அந்த நபரின் அடையாளத்தை வைத்து சாய்தர்‌ஷனின் உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது, சேலத்தை சேர்ந்தவர் என தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த வாலிபரை பிடிப்பதற்காக தனிப்படையினர் சேலம் விரைந்தனர். ஆனால் சேலம் பகுதியில் அந்த வாலிபர் பற்றி எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினர்.

    அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபரின் போட்டோவை வைத்து , அந்த நபரின் செல்போன் எண்ணை கண்டறிய முடிவு செய்தனர். அதன்படி வாலிபரின் புகைப்படத்தை செல்போன் நிறுவனங்களின் சேவை மையத்தில் காண்பித்து , தகவலை திரட்டினர். பல கட்ட ஆய்வுக்கு பின் வாலிபரின் புகைப்படத்தின் மூலம் அவரது செல்போன் எண்ணை கண்டறிந்தனர். செல்போன் சிக்னலை கண்டறிந்த போது பெங்களூரில் இருந்து கிடைத்தது. இதனால் அந்த வாலிபர் சிறுவனை பெங்களூருக்கு கடத்தி சென்றிருக்கலாம்என போலீசார் சந்தேகித்தனர்.

    இதனிடையே சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மேலும் 6 தனிப்படைகளை அமைத்து வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில், தற்போது 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இன்று சிறுவன் பத்திரமாக மீட்கப்படுவான் என்று நம்புகிறேன் என்றார். சிறுவனை மீட்பதற்காக தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். ஓசூர், பெங்களூருக்கும் சென்று தேடி வருகின்றனர்.

    இதனிடையே சிறுவனின் தாய் முத்துலட்சுமி நேற்று மதியம் மணப்பாறையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. மகன் கடத்தப்பட்ட நிலையில் தாய் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.

    கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு, கடத்திய வாலிபரை கைது செய்தால் மட்டுமே சிறுவன் கடத்தப்பட்டதற்கான முழு விவரமும் தெரியவரும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

    Next Story
    ×