search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே குழந்தையை கொலை செய்த கொள்ளையன் கைது
    X

    வாலாஜா அருகே குழந்தையை கொலை செய்த கொள்ளையன் கைது

    வாலாஜா அருகே குழந்தையை கடத்தி கொலை செய்த கொள்ளையனை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள நரசிங்கபுரம் காந்திநகரில் குடுகுடுப்பைகாரர்கள் வசிக்கும் பகுதியான பைரா குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன் (வயது 25). குடுகுடுப்பையை பிரதான தொழிலாக கொண்டவர். மற்ற நேரத்தில் கட்டிட வேலையும் செய்கிறார்.

    மனோகரனின் மனைவி சாந்தி (21). இவர்களது 1 வயது பெண் குழந்தை பொன்மணி. கடந்த 17-ந்தேதி இரவு மனோகரன், வீட்டுக்கு வெளியே வராண்டாவில் தூங்கினார். காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சாந்தி தனது குழந்தையுடன் தூங்கினார்.

    அதிகாலை 1.30 மணியளவில் குழந்தை பசிக்கு அழுதது. தூக்கத்தில் இருந்து சாந்தி எழுந்து பால் கொடுத்துவிட்டு குழந்தையை மீண்டும் தூங்க வைத்தார். பிறகு, தானும் தூங்கினார். இந்நிலையில் விடிந்தபோது, அருகில் இருந்த குழந்தை மாயமாகி இருந்தது.

    அதிர்ச்சியடைந்த சாந்தி, குழந்தையை தேடி அலைந்தார். அக்கம்- பக்கத்தில் வசிப்பவர்களும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்க வில்லை. பிறகு, வாலாஜா போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், குழந்தையை தேட தொடங்கினர். அல்லிக்குளம் கிராமத்தில் மேஸ்திரி மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. குழந்தையை கொன்று கிணற்றில் வீசியுள்ளனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு துலக்க வேலூரில் இருந்து துப்பறியும் நாய் சன்னி வரவழைக்கப்பட்டது. குழந்தையின் உடல் கிடந்த கிணற்றில் இருந்து, குழந்தை வீட்டின் அருகே வந்து மோப்ப நாய் படுத்து விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதனால் குற்றவாளியை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

    நேற்று மாலை வாலாஜா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வன்னிவேடு பகுதியில் சந்தேகப் படும்படியாக திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது42) என்பது தெரியவந்தது. மேலும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் குற்றவாளி என்பது தெரிந்தது அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது நரசிங்கபுரம் பைரா குடியிருப்பில் மனோகரனின் குழந்தையை கொலை செய்து கிணற்றில் வீசியதாக முனுசாமி தெரிவித்தார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் ஊர் ஊராக சென்று திறந்து கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்து வந்தேன். சம்பவத்தன்று கொள்ளையடிப்பதற்காக நரசிங்காபுரம் பைரா குடியிருப்புக்கு சென்றேன். அங்கு வீடு வீடாக சென்று நோட்டமிட்டேன். பக்கத்து வீட்டு மாடி வழியாக மனோகரனின் வீட்டுக்குள் புகுந்தேன். அங்கு மனோகரன் அவரது மனைவி அசந்து தூங்கி கொண்டிருந்தனர். அவர்களது குழந்தை கண் விழித்து என்னை பார்த்ததும் அழத் தொடங்கியது.

    சத்தம் கேட்டு மனோகரன் கண் விழித்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து குழந்தை வாயை பொத்தி வெளியே தூக்கி வந்தேன். அப்போதும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. உடனே குழந்தை வாய், மூக்கை அமுக்கி கொலை செய்தேன். பின்னர் குழந்தையை கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டேன். நேற்று வன்னிவேடு பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்தேன். அப்போது போலீசில் மாட்டிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் முனுசாமியை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×