search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே  3½ வயது பெண் குழந்தை எரித்துக்கொலை - தந்தை வெறிச்செயல்
    X

    சிதம்பரம் அருகே 3½ வயது பெண் குழந்தை எரித்துக்கொலை - தந்தை வெறிச்செயல்

    சிதம்பரம் அருகே 3½ வயதே ஆன பெண் குழந்தையை பெற்ற தந்தையே தீ வைத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). கூலிதொழிலாளி. இவரது மனைவி நதியா (30). இவர்களுக்கு அனுசுயாஸ்ரீ என்ற 3½ வயது பெண் குழந்தை இருந்தது.

    ஆறுமுகத்திற்கு குடி பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆறுமுகம் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். மனைவி நதியாவுடன் தகராறு செய்தார்.

    மனமுடைந்த நதியா தனது மகள் அனுசுயாஸ்ரீயை வீட்டில் விட்டு விட்டு சிதம்பரத்தை அடுத்த டி.நெடுஞ்சேரி கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இரவில் குழந்தை அனுசுயாஸ்ரீ வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தாள். குடிபோதையில் இருந்த ஆறுமுகம் திடீரென அனுசுயாஸ்ரீ மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து அவள் அலறி துடித்தாள்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தீயில் கருகிய அனுசுயாஸ்ரீயை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அனுசுயாஸ்ரீ இன்று காலை பரிதாபமாக இறந்தாள். அவளது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இது குறித்து குமராட்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    3½ வயதே ஆன பெண் குழந்தையை பெற்ற தந்தையே தீ வைத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×