search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு.
    X
    கொள்ளை நடந்த வீடு.

    ராசிபுரம் அருகே 50 பவுன் நகை - பணம் திருட்டு: போலீசார் விசாரணை

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 50 பவுன் நகை மற்றும் ரூ. 45ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மின்னக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம்(41). ஜவ்வரிசி ஆலை நடத்தி வருகிறார்.

    இவர் முன்னாள் திமுக மாவட்ட பொருளாளரும், வெண்ணந்தூர் ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான ஏ.ஆர். துரைசாமியின் மகன் ஆவார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சதாசிவம் வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது மாடி வீட்டின் கீழ் தளத்தில் இருந்த படுக்கை அறையின் (கபோர்டு) பீரோவில் இருந்து 50 சவரன் தங்க நகைகள், 45 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 9 லட்சம் மதிப்பிலான பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் மாடியில் இருந்த அறையிலும் பொருட்கள் கலைந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சதாசிவம் வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து ராசிபுரம் டி.எஸ்.பி. ராஜூ, வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் துறையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

    சம்பவ இடத்தில் ஆய்வு நடத்த வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் பொய்கை சிறிது தூரம் ஓடி நின்றது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சதாசிவம் வீட்டின் அருகே இருக்கும் கிணற்றை ஒட்டியுள்ள சுவரில் ஏறி பின்னர் பைப் மூலம் மாடிக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×