search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலவசங்கள் வழங்காவிட்டால் தேர்தலில் தோற்று போவோம்: அமைச்சர் கந்தசாமி பரபரப்பு பேச்சு
    X

    இலவசங்கள் வழங்காவிட்டால் தேர்தலில் தோற்று போவோம்: அமைச்சர் கந்தசாமி பரபரப்பு பேச்சு

    இலவசங்கள் வழங்காவிட்டால் தேர்தலில் தோற்று போவோம் என்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 15 துறைகளில் மொத்தம் 2500-க்கு மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். புதுவை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவிகள் வந்து செல்கின்றனர். நலிந்த நிலையில் உள்ள ஏராளமான மாணவிகள் காலை நேரத்தில் சிற்றுண்டி அருந்தாமல் கல்லூரிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.

    இதற்கிடையே முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஏழ்மை நிலையில் உள்ள மாணவியரின் கல்விக் கட்டணத்தை சங்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து செலுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காலையில் இலவச சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக சங்கத் தலைவர் டாக்டர் ரசியா, செயலாளர் டாக்டர் ரஜினி சனோலியன் மற்றும் உறுப்பினர்கள் நன்கொடை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் டாக்டர் ரீமன் தம்பதி ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தனர். அதே போல் சங்க உறுப்பினர்களும் சேர்ந்து திரட்டிய ரூ.50 ஆயிரம் நிதியைக் கொண்டு சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவுக்கு முதல்வர் பூங்காவனம் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் சிறப்பானது. இந்த முயற்சிக்கு பாராட்டுகள். அரசு அதிகாரிகள் தங்கள் துறைகளில் வரும் கோப்புகளை கூட சரிபார்த்து அனுப்புவதில் தாமதம் செய்யும் போக்கு உள்ளது. அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என பார்க்கின்றனர். மக்களுக்கான சேவையை எந்த பிரதிபலனும் பாராமல் செய்ய வேண்டும்.

    அரசு மாணவ-மாணவிகள் விடுதிகளில் தரமான உணவு போடப்படுவதில்லை. இதற்கு அங்கு பணிபுரிவோரின் கவனக்குறைவே காரணம். தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு அதிகாரிகள், வசதி படைத்தவர்கள் அரசு தரும் இலவச திட்டங்களை வேண்டாம் என மறுக்க வேண்டும். அதனால் மீதமாகும் தொகை ஏழைகளுக்கு பல்வேறு வகைகளில் பயன்தரும். இதுதொடர்பாக ஏப்ரல் மாதம் முதல் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளேன்.

    இலவசங்களை வழங்காவிட்டால் தேர்தலில் தோல்வியடையும் நிலை தான் உள்ளது. நலிந்த பிரிவினர் மட்டுமே இலவச திட்டங்களால் பயன்பெறும் நிலை வர வேண்டும். கல்வி தான் ஒருவரை உயர்த்தும். நாம் இறந்தாலும் பெற்ற கல்வி எப்போதும் நிலைத்திருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏக்கள் லட்சுமி நாராயணன், வையாபுரி மணிகண்டன், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×