search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை கற்களால் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை
    X

    நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை கற்களால் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

    நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை கற்களால் தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

    ராமேசுவரம்:

    கடந்த 5-ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற மீனவர்கள் 6 பேர் இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ குண்டு பாய்ந்து இறந்தார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடந்த 7-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை அறப்போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மத்திய மந்திரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு, போராட்டத்தை கைவிட்டனர். மேலும் வேலை நிறுத்தம் செய்து வந்த அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நேற்று ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 500 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று காலை அவர்களில் சிலர் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டி கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை பார்த்து எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை இழுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை கற்களால் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் வலைகளையும், படகுகளில் இருந்த மீன் பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்த சம்பவம் குறித்து அதிகாரியிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

    Next Story
    ×