search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் விவசாயம் பாதித்துள்ளது. பயிர்கள் கருகி உள்ளன. அணைகள், குளங்களில் மிக குறைவான அளவே தண்ணீர் உள்ளது. மழை இல்லாத நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லையில் கடும் வெயில் வாட்டியது. 100 டிகிரியை தாண்டிய கொளுத்திய வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. நேற்றும் மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு மலைப்பகுதிகளில் கனமழை கொட்டியது.

    இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 51.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 65.35 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 47.80 அடியாகவும், கடனா அணை 59.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 42.38 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 44.20 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 20.62 அடியாகவும் இருக்கின்றன.

    பாபநாசம் அணையில் 67 மில்லிமீட்டர் மழையும், சேர்வலாறு அணையில் 59 மில்லிமீட்டர் மழையும், மணிமுத்தாறில் 18.80 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இது தவிர குண்டாறில் 14 மில்லிமீட்டர், ராமநதி அணைப்பகுதியில் 10 மில்லிமீட்டர், கருப்பாநதி அணையில் 8 மில்லிமீட்டர் கடனா அணையில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அணைப்பகுதி தவிர இதர பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:

    செங்கோட்டை22, ஆய்க்குடி20.20, நாங்குநேரி20, அம்பை12.60, தென்காசி7.80, பாளை7.20, ராதாபுரம்4, சேர்மாதேவி2.60, சங்கரன்கோவில்1, நெல்லை1.

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தினமும் மாலையில் பெய்து வரும் மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இன்று அதிகாலை செங்கோட்டை, வல்லம், புளியரை, கற்குடி உள்ளிட்ட பகுதியில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×