search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறிஞ்சிப்பாடி அருகே சமாதானம் செய்ய சென்ற பெண் வெட்டிக்கொலை
    X

    குறிஞ்சிப்பாடி அருகே சமாதானம் செய்ய சென்ற பெண் வெட்டிக்கொலை

    குறிஞ்சிப்பாடி அருகே சண்டையை சமாதானம் செய்ய சென்ற பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இவரது அண்ணன் கணபதிக்கும் இடையே வீட்டு மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சதீஷ் குமார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு குடிபோதையில் கணபதியின் வீட்டு கதவை தட்டினார். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த கணபதியும் அவரது மனைவி ராணியும் வெளியே வந்தனர்.

    சதீஷ்குமார் அங்கு நிற்பதை கண்டு எதற்காக இந்த நேரத்தில் கதவை தட்டுகிறாய் என்று கேட்டனர். குடிபோதையில் இருந்த சதீஷ்குமார் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு கணபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அண்ணன்-தம்பி 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் சரோஜா (50) என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவர் சதீஷ் குமாரை பார்த்து எதற்காக அதிகாலையிலேயே அண்ணனுடன் தகராறு செய்கிறாய்? சண்டை போடாதே என்று சமாதானம் செய்தார்.

    இதில் சதீஷ்குமார் ஆத்திரமடைந்து வீட்டிற்கு வெளியே கிடந்த அரிவாள் மனையை எடுத்து சரோஜாவின் தலையில் சரமாரியாக வெட்டினார். நிலை தடுமாறிய அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் சரோஜா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அங்கிருந்து சதீஷ் குமார் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தை அறிந்த அந்தபகுதி பொதுமக்கள் சரோஜா வீட்டுமுன்பு திரண்டனர்.

    இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தப்பி ஓடிய சதீஷ் குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×