search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல்
    X

    சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல்

    புதுக்கோட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வரும் ஒரு காரில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்க இலாகாவின் கோவை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சுங்க இலாகாவின் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அருகே உள்ள தொண்டமான் நல்லூர் சுங்க சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்குடியில் இருந்து சென்னை செல்வதற்காக வந்த ஒரு காரில் 11.9 கிலோ எடை உள்ள 12 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.3½ கோடியாகும்.

    தங்க கட்டிகள் கடத்தி வந்த காரை ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த காந்தி (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். அவரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கையில் இருந்து கடல்வழியாக தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டதும், அவை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரை பகுதியில் பெறப்பட்டு சென்னைக்கு காரில் கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

    மேலும் டிரைவர் காந்தி, “இந்த கார் சென்னையை சேர்ந்த குட்லக் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது. அவரிடம் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். அவர் சொன்னதன் பேரில்தான் தங்க கட்டிகளை கடத்தி வந்தேன்” என வாக்கு மூலம் அளித்தார்.

    சுங்க இலாகா அதிகாரிகள் காந்தியை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    காந்தி தனது வாக்குமூலத்தில் கூறிய குட்லக் ராஜேந்திரன் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆவார். இதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்றனர்.

    வீட்டில் இருந்த ராஜேந்திரனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவருடைய வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. அவரது செல்போனையும் வாங்கி அவர் யார் யாரிடம் பேசியுள்ளார் எனவும் ஆய்வு செய்தனர்.

    அப்போது தங்க கட்டிகள் கடத்தலில் குட்லக் ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
    Next Story
    ×