search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி ரித்திகா கொலையில் முரண்பட்ட தகவலால் குழப்பம்: கைதான பெண்ணிடம் விசாரணை
    X

    சிறுமி ரித்திகா கொலையில் முரண்பட்ட தகவலால் குழப்பம்: கைதான பெண்ணிடம் விசாரணை

    சிறுமி ரித்திகா கொலையில் முரண்பட்ட தகவலால் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
    திருவொற்றியூர்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பு 26-வது பிளாக்கில் வசித்து வருபவர் பழனி. இவரது 3 வயது மகள் ரித்திகா.

    கடந்த சனிக்கிழமை மாலை வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்த ரித்திகா திடீரென மாயமானாள். மறுநாள் காலை அவள் திருவொற்றியூர்-மணலி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். வாயில் துணி திணிக்கப்பட்டு, வாயும் துணியால் கட்டப்பட்டு இருந்தது.

    இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரேவதி நகைக்காக சிறுமி ரித்திகாவை கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரேவதியை போலீசார் கைது செய்தனர். பக்கத்து தெருவில் உள்ள அடகு கடையில் ரூ.2 ஆயிரத்து 200-க்கு அடகு வைக்கப்பட்டு இருந்த ரித்திகாவின் வெள்ளி கொலுசு, வெள்ளிக் கொடியை மீட்டனர்.

    ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, சிறுமி அணிந்து இருந்த நகையை பறித்து விட்டு அடகு வைக்க சென்று விட்டதாகவும் அப்போது அதே பகுதியில் வசிக்கும் தனது கள்ளக்காதலன் ஒருவர் ரித்திகாவை பாலியல் கொடுமை செய்து கொன்றதாகவும் முதலில் தெரிவித்தார்.

    பின்னர் வீட்டில் இருந்த தந்தை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக கூறினார்.

    இதை தொடர்ந்து, ரேவதியின் தந்தையை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் மது போதையில் வீட்டில் உள்ள அறையில் தூங்கி விட்டதாகவும் ரித்திகா கொலை பற்றி தெரியாது என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் ரித்திகா கொலையில் குற்றவாளிகள் குறித்து முடிவு செய்ய முடியாமல் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    இதே போல் கைதான ரேவதி, சிறுமியின் கொலையில் தொடர்புடையதாக தனது சகோதரர்கள் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர்கள் சிலரது பெயரை தெரிவித்தார்.

    அவர்களுக்கு சிறுமி கொலையில் தொடர்பு இல்லாததை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். எனினும் ரேவதியின் குழப்பமான தகவலால் அவர் மீது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொலைக்கு வேறு யாரேனும் உதவியிருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக ரேவதியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ஆரம்பத்தில் சிறுமி ரித்திகா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது இதனை மறுத்து வருகிறார்கள். நகைக்காக மட்டுமே கொலை நடந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    ஆனால் ரித்திகாவின் இறப்பு சான்றிதழில் ‘‘பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “ரித்திகா கொலையில் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

    பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா? என்பது தெரியவரும். இதனை வைத்து அடுத்த கட்ட விசாரணை நடத்துவோம்” என்றார்.

    ரித்திகா கொலையில் முரண்பட்ட தகவலால் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட ரேவதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டடு சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×