search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்த தி.மு.க.வினர் எங்கே சென்றார்கள்?: வைகோ
    X

    காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்த தி.மு.க.வினர் எங்கே சென்றார்கள்?: வைகோ

    காளைகளை விலங்குகள் பட்டியலில் சேர்க்கும் போது காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்த தி.மு.க.வினர் எங்கே சென்றார்கள்? என்று சங்கரன்கோவிலில் வைகோ கேள்வி எழுப்பினார்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமாக இருந்தது. அதுபோல் தற்போது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல் கல்லூரி மாணவ- மாணவிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    2008- 09-ம் ஆண்டு இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இதே போல மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அன்றைக்கு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.வினர் நீலிக்கண்ணீர் வடித்தனர். முத்துக்குமார் உள்ளிட்ட 18 பேர் தற்கொலை செய்தபோது ஆட்சியில் இருந்த தி.மு.க.வினர், குடும்ப பிரச்சனைக்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று இலங்கை தமிழர் பிரச்சனையில் நாடகம் ஆடினர். மேலும் காவல்துறை மூலம் போராட்டத்தை நசுக்கினர்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது தான் காளைகளை விலங்குகள் பட்டியலில் சேர்த்தனர். அப்போது தி.மு.க.வும் ஆட்சியில் பங்கு வகித்தது. காளைகளை விலங்குகள் பட்டியலில் சேர்க்கும்போது தி.மு.க.வினர் எங்கே சென்றார்கள். இலங்கை தமிழர் பிரச்சனையில் தி.மு.க.வினர் நாடகம் ஆடியது போல் ஜல்லிக்கட்டு பிரச்சனையிலும் தற்போது நாடகம் ஆடுகிறார்கள். இதனை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எந்தவித அரசியல் பின்புலம் இன்றி நடைபெறும் மாணவ- மாணவிகளின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்த போராட்டத்தில் தி.மு.க. கலந்து கொள்ள எந்தவித தகுதியும் இல்லை.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று உள்ளது. அதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆடு, கோழிகளை வெட்டுவதற்கு தடை விதிப்பார்களா? தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் ஆட்சியில் கேடு செய்ய பலர் கிளம்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பான ஆட்சி நடத்தி வருகிறார். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறினார்.
    Next Story
    ×