search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூரில் 2-வது கணவருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் கொடூர கொலை
    X

    ஓமலூரில் 2-வது கணவருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் கொடூர கொலை

    ஓமலூரில் 2-வது கணவருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் வீட்டு மொட்டை மாடியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓமலூர்:

    தர்மபுரி மாவட்டம் ஜருகுமலையை சேர்ந்தவர் கணேசன்(வயது 38). இவரது மனைவி தங்கமணி(30). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில், கணவர் கணேசனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவரை விட்டு பிரிந்து 3 குழந்தைகளையும் அங்கேயே விட்டு, விட்டு ஓமலூர், கண்ணனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு தங்கியிருந்து ஓமலூரில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    அப்போது சேலம் மாவட்டம் ஓமலூர், பரமச்சியூரை சேர்ந்த தங்கவேல்(28) என்பவருக்கும், தங்கமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    தங்கமணியும், தங்கவேலும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். ஒன்றாகவே குடும்பமும் நடத்தியும் வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் வெளியில் தெரிய தொடங்கியது.

    அப்போது தங்கவேலுக்கு திருமணம் ஆகவில்லை என தெரிந்த தங்கமணி அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தங்கமணி நேற்று காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பிறகு அவர் இரவு 11 மணி அளவில் வீட்டு மொட்டை மாடியில் சென்று படுத்து தூங்கினார்.

    அப்போது அங்கு யாரோ வந்து தங்கமணியை சரமாரியாக வெட்டினார். கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியதால் தங்கமணி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார். அவர் இறந்து விட்டதை உறுதி செய்த கொண்ட கொலையாளிகள் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தங்கமணியின் முகம், கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியதால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    நள்ளிரவு நேரத்தில் அவரது தாயார் மொட்டை மாடிக்கு வந்தார். அப்போது மகள் தங்கமணி கொலை செய்யப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு கொலை குறித்து தகவல் தெரிவித்தார். அதன் பிறகு ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து டி.எஸ்.பி. திருமால்அழகு, இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து தங்கமணியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் அழைத்து வந்து மோப்பம் பிடிக்க விடப்பட்டது. இது மோப்பம் பிடித்து கொண்டு மேட்டூர் மெயின் ரோடு வரை சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்களும் அழைத்து வந்து, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்யப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட தங்கமணிக்கு கழுத்தில் 8 இடங்களிலும், கைகளில் 13 இடங்களிலும், கால் பகுதியில் 4 இடங்களிலும் சரமாரியாக வெட்டு காயங்கள் உள்ளது. எனவே இந்த வெட்டு காயங்களை வைத்து பார்க்கும் போது, யாரோ தீராத பகையின் காரணமாக அல்லது ஆசைக்கு இணங்க மறுத்ததன் காரணமாக தங்கமணியை கொடூரமாக வெட்டி கொலை செய்து இருக்கிறார்கள் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்திருக்கிறது.

    கொடூரமான முறையில் கொலை செய்த நபர்கள் யார்? என்பதை கண்டு பிடிக்க சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜன் தனிப்படை அமைத்து உடனடியாக கொலையாளிகளை கண்டு பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

    இதில் டி.எஸ்.பி. திருமால்அழகு மற்றும் போலீசார் இடம் பெற்று விசாரித்து வருகிறார்கள். இவர்கள் தங்கமணியின் கள்ளக்காதலன் தங்கவேலை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    தன்னுடன் பழகி வந்த தங்கமணி திடீரென பேசாததால் அவரை தங்கவேல் கொடூரமாக கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    இந்த கொலை தொடர்பாக தங்கமணியின் உறவினர்கள் சிலரை போலீசார் அழைத்து விசாரித்தும் வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×