search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
    X

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்

    கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
    கோவில்பட்டி:

    தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ‘ஏறு தழுவுதல்‘ எனும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி, இளைஞர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கல்லூரி மாணவர்கள் ஆனந்த், சதீஷ், செந்தில் தலைமையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டனர்.

    உடனே அங்கு வந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் உரிய அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்று மாணவர்கள், இளைஞர்களிடம் அறிவுறுத்தினர்.

    இதையடுத்து அங்கிருந்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வரையிலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் மறித்தனர். இதையடுத்து கோவிலின் தென்புறம் ரத வீதியில் அமர்ந்து அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்க திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் அனைவரையும் விடுவித்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி ஜல்லிக்கட்டை ஆதரித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே இன்று காலை ஏராளமான கல்லூரி மாணவர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×