search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாயத்து நிர்வாகத்தில் கலெக்டர்கள் தலையிட தடை விதிக்க முடியாது - ஐகோர்ட்டு
    X

    பஞ்சாயத்து நிர்வாகத்தில் கலெக்டர்கள் தலையிட தடை விதிக்க முடியாது - ஐகோர்ட்டு

    பஞ்சாயத்து நிர்வாகத்தில் மாவட்ட கலெக்டர்கள் தலையிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    சென்னை:

    பஞ்சாயத்து நிர்வாகத்தில் மாவட்ட கலெக்டர்கள் தலையிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களின் சிறப்பு அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    எனவே காசோலை உள்ளிட்ட பஞ்சாயத்து தலைவர்களின் சிறப்பு அதிகாரத்தில் மாவட்ட கலெக்டர்கள் தலையிட தடை விதிக்க வேண்டும். பஞ்சாயத்து நிதியை கையாள மூன்றாவது நபர்களை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் மொத்தம் 120 பஞ்சாயத்து தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. எனவே காசோலை அதிகாரத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘பஞ்சாயத்து தலைவர்கள் கடமை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுகிறார்களா? என்பதை நிர்வாக ரீதியாக விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

    என்ன தான் சட்ட ரீதியாக அதிகாரப் பகிர்வு அளித்தாலும் பஞ்சாயத்து நிதியில் மோசடி செய்தல், கையாடல் செய்தல் போன்றவைகளும் நடக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாவட்ட கலெக்டர்கள் தலையிடத்தான் செய்வார்கள். எனவே ஒட்டுமொத்தமாக மாவட்ட கலெக்டர்கள், பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியாது. வழக்கின் தன்மையை பொருத்துதான் உத்தரவிட முடியும்’ என மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×