search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த மாணவி காவ்யா.
    X
    தற்கொலை செய்த மாணவி காவ்யா.

    திருமணத்திற்கு வாலிபர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

    திருமணத்திற்கு வாலிபர் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட 9-ம் வகுப்பு மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தட்சன்காடு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயா.இவர்களுக்கு காவியா (வயது 15), தர்ஷினி (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீரமணி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் விஜயா கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் 2 மகள்களை படிக்க வைத்து, குடும்பத்தை கவனித்து வந்தார்.

    இவருடைய மூத்த மகள் காவியா அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலையில் காவியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அந்த சமயத்தில் 5-ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை தர்ஷினியும் அங்கு இல்லை.

    வெளியே சென்ற தாய் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மகள் காவியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவியின் தாய் விஜயா வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மகள் காவியா பள்ளி காலாண்டு விடுமுறையின் போது ராசிபுரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாமுவேல் என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தன்னை காதலிக்குமாறு கூறி காவியாவை வற்புறுத்தினார்.

    விடுமுறை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் அவர் அடிக்கடி போன் செய்து அவளை காதலிக்க வற்புறுத்தி வந்தார். இதனால் எனது மகள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருந்தார்.

    இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த காவியாவின் தாய் மற்றும் உறவினர்கள் இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தற்கொலைக்கு காரணமான ஆட்டோ டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும். கைது செய்தால் தான் உடலை நாங்கள் பெற்றுக் கொள்வோம் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது அங்கு வந்த சேலம் வெண்ணந்தூர் போலீசார் காவியாவின் தாய் மற்றும் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×