search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை: கேண்டீன் ஊழியர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
    X

    திருச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை: கேண்டீன் ஊழியர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

    திருச்சி அருகே வேலைக்கு சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகே உள்ள சின்னசூரியூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேல், கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சொக்காயி என்ற மனைவி உள்ளார்.

    இதற்கிடையே பெரியக்கா (வயது 40) என்பவரை 2-வ தாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லட்சுமி (16) என்ற மகளும், சிவமணி (10), பழனி (8) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

    குடும்பம் நடத்த கணவரின் வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் பெரியக்கா பெல் நிறுவனம் அருகே உள்ள ஐ.ஐ.எம். கல்லூரி கேண்டீனில் வேலை பார்த்து வந்தார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர் மாலையில் வீடு திரும்புவார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற இவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கேண்டீன் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் பெரியக்காவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையே மறுநாள் ஆட்டோ டிரைவர் ஒருவர் பெரியக்காவை வீட்டில் கொண்டுவந்து விட்டார். அப்போது பெரியக்கா மிகவும் உடல் சோர்வாக காணப்பட்டார். உடலில் சில இடங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. சிறிது நேரத்தில் மயங்கிய அவரை கணவர் பழனிவேல் கீரனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பெரியக்கா கணவரிடம் கூறும்போது, தன்னுடன் கேண்டீனில் வேலை பார்க்கும் லால்குடியை சேர்ந்த ஊழியர் ஒருவர் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிய தன்னை கடத்தி சென்று சரமாரியாக தாக்கியதாகவும், பின்னர் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச்சென்றதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெரியக்கா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசில் பழனிவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பெரியக்காவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக வழக்குப்பதிவு செய்து கேண்டீன் ஊழியர் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    மேலும் பெரியக்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் பெரியக்கா இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

    Next Story
    ×